குழாய்களில் அடிக்கடி உடைப்பு வீணாகும் குடிநீர்; அதிகாரிகள் அலட்சியம்
4/22/2016 2:17:45 PM
சென்னை நகரில் சென்ட்ரல் ரயில் நிலையம் உட்பட பல்வேறு முக்கிய சாலைகள் வழியாக குடிநீர் குழாய் இணைப்புகளில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு, குடிநீர் வெள்ளமென பெருக்கெடுத்து சாலைகளில் ஓடி வீணாகி வருகிறது. அந்த நீரையும் அப்பகுதியில் வசிக்கும் மக்கள், போக்குவரத்து நெரிசலையும் மீறி பாத்திரங்களில் சேகரிக்கும் அவலம் தொடர்ந்து நீடித்து வருகிறது.சென்னை நகரில் கடந்த 2 மாதங்களாக பகல் நேரங்களில் கோடை வெயில் அனைத்து பகுதிகளிலும் சுட்டெரித்து வருகிறது. வரப்போகும் கத்தரி வெயில் இப்போதே நம்மை அச்சுறுத்தி வருகிறது.
இதேபோல், சென்னை நகரின் பல இடங்களில் தற்போது குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடி வருகிறது. குழாய் இணைப்புகளின் கடைசிப் பகுதிகளில் தண்ணீர் வராததால், குடிநீர் தொட்டிகளில் நீர் நிரப்பப்பட்டு வந்தன. தற்போது தொட்டிகளிலும் முறையாக தண்ணீர் நிரப்பப்படுவதில்லை. இதனால், தனியார் லாரிகளில் ஒரு குடம் ரூ. 8க்கு குடிநீரை வாங்கி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். திருவொற்றியூர், மணலி, வியாசர்பாடி, பெரம்பூர், மூலக்கொத்தளம், புளியந்தோப்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 3 நாளைக்கு ஒருமுறைதான் குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சென்ட்ரல் ரயில் நிலையம் மற்றும் அரசு பொது மருத்துவமனை அருகே பூந்தமல்லி நெடுஞ்சாலையில் ேநற்று காலை பூமிக்குள் இருந்த ராட்சத குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. அங்கு தார்சாலையில் இருந்த பள்ளங்கள் மற்றும் உடைப்புகளுக்கு இடையே குடிநீர் ஊற்றாகப் பொங்கி வழிந்தது. இதைப் பார்த்ததும் அங்கு நடைபாதையில் வசிக்கும் பெண்களும் சிறுவர், சிறுமிகளும் ஏராளமான பிளாஸ்டிக் குடங்களுடன் தண்ணீரை பிடிக்க ஓடிவந்தனர். காலைநேர போக்குவரத்து நெரிசல் மிக்க நேரத்தில், அவர்கள் உயிருக்கு துணிந்து, சாலையின் நடுவே பெண்களும் குழந்தைகளும் பிளாஸ்டிக் குடங்களில் குடிநீரை பிடித்து நிரப்பி கொண்டிருந்தனர். அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் இக்காட்சிகளை பார்த்து வேதனைப்பட்டனர்.
இதேபோல் மயிலாப்பூர், ஆழ்வார்பேட்டை, சைதாப்பேட்டை, ராயப்பேட்டை, அண்ணாசாலை, எழும்பூர், வால்டாக்ஸ் சாலை, மூலக்கொத்தளம், பாய் கடை, மின்ட் சாலை, என்எஸ்சி போஸ் சாலை, ராயபுரம் சாலை, வள்ளலார் நகர், ஸ்டான்லி மருத்துவமனை, பிராட்வே போன்ற பகுதிகளிலும் அவ்வப்போது குடிநீர் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு, சாலைகளில் தண்ணீர் ஓடி வீணாகி வருகிறது. இதைப் பிடிப்பதற்கு அப்பகுதி மக்கள் குடங்களுடன் அலைந்து வருகின்றனர்.இதுகுறித்து அப்பகுதி மக்களிடம் கேட்டபோது, ‘எங்கள் பகுதியில் தெருக்குழாய்கள் இல்லை. அப்படியே இருந்தாலும் அதில் தண்ணீர் வருவதில்லை. எங்களால் காசு கொடுத்து தண்ணீரை வாங்க முடியாது. இங்குள்ள சாலைகளில் அடிக்கடி குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகும்.
நாங்கள் எந்தெந்த பகுதிகளில் குழாய்களில் தண்ணீர் கசியும் என்பதை தெரிந்து கொண்டு, அங்கு பிளாஸ்டிக் குடங்களில் தண்ணீரை பிடிக்கும் அவலநிலை உள்ளது. இதுகுறித்து ஆளுங்கட்சி நிர்வாகிகளிடம் முறையிட்டும் பிரச்னையைத் தீர்க்க முன்வரவில்லை. எங்களை யாரும் உயிருள்ள மனிதர்களாக மதிப்பதில்லை’ என்று சோகத்துடன் கூறுகின்றனர்.இதேபோல் புரசைவாக்கம், டவுட்டன், கீழ்ப்பாக்கம், வில்லிவாக்கம், அமைந்தகரை, எம்எம்டிஏ காலனி, கோயம்பேடு, மேற்கு அண்ணாநகர் பகுதிகளிலும் குடிநீர் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு வருகிறது. இதை தடுப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
கடந்த மாதம் புழல் ஏரியில் இருந்து ஜிஎன்டி சாலை வழியாக கீழ்ப்பாக்கம் குடிநீரேற்று வாரியத்துக்கு செல்லும் ராட்சத குழாய்களில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் ஜிஎன்டி சாலையில் தேங்கிய குடிநீரை வாகனங்கள் வீணாக வாரியிறைத்தபடி பறந்து சென்றன. ஆனால், குடிநீர் வாரியத்தில் இந்நிலையில் ஊழியர்கள் பற்றாக்குறை நிலவுவதால் உடைப்பை உடனடியாக தடுப்பதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. குழாய் உடைப்புக்கு மற்ற துறைகளின் மீது பழி போடுவதில் வாரிய அதிகாரிகள் குறியாக இருக்கின்றனர் என்று அரசு ஊழியர்களும் புலம்புகின்றனர்.இதுகுறித்து ஒருசில மூத்த அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘நாங்க என்ன சார் பண்ண முடியும்? இப்போ தேர்தலை முன்னிட்டு மக்களிடம் ஆளுங்கட்சி நல்ல பெயர் எடுப்பதற்காக, அவர்களுக்கு வருவாய் தரும் ரெடிமேடு தார்சாலை மற்றும் சேதமான கால்வாய் பணிகளை முடிப்பதில் ஆளுங்கட்சி நிர்வாகிகள் மும்முரம் காட்டி வருகின்றனர். இதனால் இதுபோன்ற முக்கிய பணிகளில் எங்களால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை.
உதாரணமாக, மயிலாப்பூர் சிவசாமி சாலை மற்றும் மந்தைவெளி தேவநாதன் சாலைகளில் கடந்த 6 மாத காலமாக குழாய்களை பழுது செய்யும் பணிகள் மந்தமாக செயல்படுகிறது. அனைத்து அத்தியாவசியப் பணிகளிலும் ஆளுங்கட்சியினர் தலையிட்டால், நாங்கள் எப்படி சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள முடியும்?’ என்று நம்மிடமே அதிகாரிகள் எதிர்க்கேள்வி கேட்கின்றனர்.‘இப்போதே சென்னை நகர மக்கள் சுட்டெரிக்கும் வெயிலில் குடிநீருக்காக ஒவ்வொரு பகுதியாக அலைய வேண்டியுள்ளது. அடுத்து வரும் கத்தரி வெயிலில் குடிநீர் பற்றாக்குறை இன்னும் அதிகரிக்கும். அதற்குமுன் ஏதேனும் சாக்குபோக்கு கூறாமல் இத்தகைய சீரமைப்பு பணிகளை அதிகாரிகள் உடனடியாக சரிசெய்ய வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர். இதற்கு அதிகாரிகள் பதில் கூறுவார்களா என்பதே மில்லியன் டாலர் கேள்வி.