விஷ்ணு பிரியா வழக்கு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் மனுதாரர் வக்கீல் வாதம்
4/21/2016 3:10:55 PM
சென்னை: நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு டிஎஸ்பியாக பணிபுரிந்து வந்த விஷ்ணு பிரியா, சில மாதங்களுக்குமுன் தனது அலுவலகத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தலித் இளைஞர் கோகுல்ராஜ் கொலை வழக்கு விசாரணையில், உயரதிகாரியின் அழுத்தம்தான், இந்த தற்கொலைக்குக் காரணம் என்று பெற்றோர்கள் குற்றம் சாட்டினார். இந்த வழக்கு, காவல் துறையிடமிருந்து சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. விஷ்ணு பிரியாவின் உயர் அதிகாரியான நாமக்கல் எஸ்.பி. செந்தில்குமார் உள்பட 100க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடைபெற்றது. இதில், எந்தவித முன்னேற்றமும் இல்லாததையடுத்து, விஷ்ணுப்பிரியாவின் தந்தை ரவி, சிபிஐ விசாரணை கோரி, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை, தனி நீதிபதி தள்ளுபடி செய்தார்.
இதனால் ரவி, சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். அதில், ‘இந்த வழக்கில் மாவட்ட எஸ்.பி., டிஐஜி மற்றும் டிஜிபி அலுவலகத்திலுள்ள ஐபிஎஸ் அதிகாரிகள் ஆகியோரின் தலையீடு உள்ளது. எனவே இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும்’ என்று கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் அக்னி கோத்திரி மற்றும் வேணுகோபால் ஆகியோர் முன்பு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக உள்துறை செயலாளர் சார்பாக தாக்கல் செய்த பதில் மனுவில், விஷ்ணுபிரியா வழக்கில் தீவிரமாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதில் சிபிஐ விசாரணைக்கு தனி நீதிபதி உத்தரவிட மறுத்து வழக்கை தள்ளுபடி செய்தார். எனவே இந்த வழக்கையும் தள்ளுபடி செய்ய வேண்டும். சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கூடாது என்று கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு இன்று நீதிபதிகள் அக்னி கோத்ரே, பாரதிதாசன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பாக மூத்த வக்கீல் வில்சன் ஆஜராகி, ‘தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்த மனுவை ஏற்று ெகாள்ள கூடாது. இந்த வழக்கை தமிழக போலீசார் நியாயமாக, நேர்மையாக விசாரிக்க மாட்டார்கள். உயர் போலீஸ் அதிகாரி கொலை வழக்கிலேயே அரசு மெத்தமான செயல்படுகிறது. புலன் விசாரணை அதிகாரிகள் தாக்கல் செய்த பதில் மனுவும், போலீஸ் டிஜிபி தாக்கல் செய்த இந்த வழக்கின் பதில் மனுவும் முன்னுக்கு பின் முரணாக உள்ளது. எனவே சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டால்தான் உண்மை தெரியும். எனவே சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்’ என்றார். இதையடுத்து இந்த வழக்கை வரும் ஜூன் மாதத்துக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.