‘ராயபுரம் தொகுதி ராயல்புரமாகும்’ காங்கிரஸ் வேட்பாளர் ராயபுரம் மனோ உறுதி
4/21/2016 3:09:50 PM
சென்னை: திமுக கூட்டணியில் ராயபுரம் தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டது. இத்தொகுதி வேட்பாளராக வடசென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராயபுரம் ஆர்.மனோ நிறுத்தப்பட்டுள்ளார். இத்தொகுதிக்குட்பட்ட என்.என்.கார்டன் பகுதியில் வசித்து வருகிறார். எம்.டெக், எம்பிஏ கல்வி பயின்றுள்ள மனோ, சண்முகா டிரான்ஸ்போர்ட் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். அதோடு, தனியாக அறக்கட்டளை நடத்தி வரும் அவர் பொது நலப்பணிகளில் தன்னை முழுவதுமாக அர்ப்பணித்துள்ளார். குறிப்பாக அப்பகுதி மீனவர்களின் நலனுக்காக குரல் கொடுத்து வருகிறார்.
2002ம் ஆண்டு முதல் வடசென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவராக உள்ளார். 2002-06 வரை சென்னை மாநகராட்சி மன்ற காங்கிரஸ் தலைவர், 1996-06 வரை மாநகராட்சி கவுன்சிலராக பதவி வகித்துள்ளார். தேர்தல் பிரச்சாரத்தை புதுமையாக நடத்தி, தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றி ராயபுரத்தை ராயல்புரமாக மாற்றுவேன் என்கிறார். ராயபுரம் ரயில் முனையம், ஸ்டான்லி மருத்துவமனை தரம் உயர்த்துதல், அரசு சலுகைகள் இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக மக்களுக்கு சென்றடையச் செய்வது, அதிக அளவிலான மீன்களை உற்பத்தி செய்யும் மீனவர்களுக்கு விருது, பொற்கிழி வழங்குவது உட்பட 30 வாக்குறுதிகளை கொடுத்துள்ளார்.