செக் மோசடி வழக்கில் விஜய் மல்லையா குற்றவாளி ஐதராபாத் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு
4/21/2016 2:35:51 PM
ஐதராபாத்: ரூ. 50 லட்சம் செக் மோசடி வழக்கில் தொழிலதிபர் விஜய் மல்லையா குற்றவாளி என ஐதராபாத் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது.கர்நாடகாவை சேர்ந்த தொழில் அதிபர் விஜய் மல்லையாவுக்கு சொந்தமான விமான போக்குவரத்து நிறுவனம் தற்போது தொடர் நஷ்டம் காரணமாக மூடப்பட்டு விட்டது. இந்நிறுவனத்துக்காக பல்வேறு வங்கிகள் கொடுத்த கடன் ரூ. 9 ஆயிரம் கோடி கடன் திருப்பி செலுத்தப்படாமல் உள்ளது. இந்த தொகையை வசூலிக்க வங்கிகள் கூட்டமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன.
இதற்கிடையில் மல்லையா வெளிநாடு தப்பி சென்று விட்டார். விமானப்போக்குவரத்து நிறுவனத்தை மேம்படுத்துவதற்காக ஐடிபிஐ வங்கியில் ரூ. 950 கோடி வாங்கி அதனை வெளிநாடுகளில் சொத்து வாங்க பயன்படுத்தியதாக மல்லையா மீது தனியாக குற்றச்சாட்டு உள்ளது. இது தொடர்பாக அமலாக்கத்துறை அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் சில தினங்களுக்கு முன்பு பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவரை வெளிநாட்டில் கைது செய்ய இன்டர்போலின் உதவியை நாடவும் அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளது.
இதற்கிடையில் மல்லையாவின் விமான போக்குவரத்து நிறுவனம் சார்பாக ஐதராபாத் விமான நிலையத்தை பராமரித்து வரும் ஐிஎம்ஆர் ஐதராபாத் இன்டர்நேஷனல் ஏர்போர்ட் லிமிடெட் நிறுவனத்துக்கு ரூ. 50 லட்சம் செக் கொடுக்கப்பட்டிருந்தது. மல்லையாவின் விமானங்களை ஐதராபாத் விமான நிலையத்தில் நிறுத்தி வைப்பதற்கான கட்டணம் இது. இந்த செக் வங்கியில் பணம் இல்லாமல் திரும்பி விட்டது. இது தொடர்பாக ஐதராபாத் கோர்ட்டில் விஜய் மல்லையா மீது செக் மோசடி வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் ஏற்கனவே மல்லையாவுக்கு எதிராக பிடிவாரன்ட் பிறப்பிக்கபட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. செக்மோசடி வழக்கில் விஜய் மல்லையா குற்றவாளி என நீதிபதி தீர்ப்பளித்தார். இருப்பினும் விஜய் மல்லையா கோர்ட்டில் இல்லாத காரணத்தால் தண்டனை விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்றார்.