பெங்களூரை வீழ்த்தியது மும்பை இதுபோன்றுதான் விளையாட விரும்புகிறோம் மும்பை கேப்டன் ரோகித்சர்மா பேட்டி
4/21/2016 2:34:14 PM
மும்பை: ஐபிஎல் தொடரின் 14வது லீக் ஆட்டம் மும்பை வாங்கடே மைதானத்தில் நேற்று இரவு நடந்தது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்-மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை கேப்டன் ரோகித் சர்மா பவுலிங்கை தேர்வு செய்தார். இதன் பின் முதலில் களமிறங்கிய பெங்களூர் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் குவித்தது. ஹெட் 37 (24 பந்துகள், 2 பவுண்டரி, 2 சிக்சர்), கேப்டன் கோஹ்லி 33 (30 பந்துகள், 3 பவுண்டரி), டிவில்லியர்ஸ் 29 (21 பந்துகள், 3 பவுண்டரி, 1 சிக்சர்), சர்ப்பராஸ்கான் 28 ரன் (18 பந்துகள், 2 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். மும்பை தரப்பில் பும்ரா 3, கருணல் பாண்ட்யா 2, மெக்கிளினகன் 1 விக்கெட் வீழ்த்தினர்.
அடுத்து களமிறங்கிய மும்பை அணி 18 ஓவர்களில் 4 விக்கெட்டை மட்டும் இழந்து 171 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கேப்டன் ரோகித் சர்மா 62 (44 பந்துகள், 4 பவுண்டரி, 3 சிக்சர்), போலார்டு 40 (19 பந்துகள், 4 பவுண்டரி, 3 சிக்சர்), அம்பதி ராயுடு 31 (23 பந்துகள், 5 பவுண்டரி), பட்லர் 28 ரன் (14 பந்துகள், 2 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். இதன் மூலம் 5வது போட்டியில் விளையாடிய மும்பை அணி 2வது வெற்றியை பதிவு செய்தது. வெற்றி குறித்து ஆட்ட நாயகன் விருது வென்ற மும்பை கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில், இது போன்ற ஆட்டத்தைதான் வெளிப்படுத்த வேண்டும் என விரும்புகிறோம். பவுலர்கள் சிறப்பாக பந்து வீசி பெங்களூர் அணியை 170 ரன்னுக்கு கட்டுப்படுத்தி விட்டனர்.
மிடில் ஓவர்களில் கருணல் பாண்ட்யா சிறப்பாக பந்து வீசினார். எங்கள் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தினோம். கடைசியில் பட்லர் நன்றாக விளையாடினார். அதை போலார்டு சிறப்பாக முடித்து விட்டார். அவரவர்களின் நாட்டு அணிகளுக்கு அவர்கள் மேட்ச் வின்னர்கள். அவர்கள் சிறப்பாக செயல்பட வேண்டும் என எதிர்பார்க்கிறோம். சிறப்பாக விளையாடிய ராயுடுவுக்கும் பாராட்டுக்கள். டாப் ஆர்டரில் நன்றாக அடித்தளம் அமைக்க வேண்டியது அவசியம். பிட்ச் நன்றாக இருந்தது என்றார்.