தடை காலம் எதிரொலி மீன், நண்டு விலை விர்... கருவாடுக்கு மவுஸ் கூடியது
4/19/2016 2:29:11 PM
ராமேஸ்வரம்: மீன்பிடி தடை காலம் துவங்கி உள்ளதால் மீன், நண்டு விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கருவாடுக்கும் கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் 45 நாட்கள் மீன்பிடி தடைகாலம் துவங்கியுள்ளது. இதனால் மீனவர்கள் தங்களது படகு, வலைகளை சரிப்படுத்தும் பணியில் தற்போது ஈடுபட்டு உள்ளனர். ஆனால் நாட்டுப்படகுகளில் சென்று கடலில் மீன்பிடிக்கின்றனர். இதனால் மீன்கள் குறைந்த அளவே கிடைக்கிறது. வலையில் சிக்கும் பெரிய வகை மீன்களை மொத்த வியாபாரிகள் கடற்கரையிலேயே நல்ல விலை கொடுத்து வாங்கி சென்று விடுவதால் இரண்டாம் ரக மீன்கள் மட்டுமே விற்பனைக்கு வருகிறது.
மீன்களின் வரத்து குறைவாக உள்ளதால் மார்க்கெட்டில் மீன்களின் விற்பனை அதிகரித்துள்ளது. ராமேஸ்வரம் மார்க்கெட்டில் வழக்கமாக ஒரு கிலோ ரூ.200க்கு விற்பனை செய்யப்பட்ட விலை மீன் நேற்று ரூ.250 க்கு விற்பனையானது. ரூ.150க்கு விற்ற ஊளி ரூ.200, ரூ.250 க்கு விற்ற முரல்மீன், கிளக்கான், கடல் நண்டு ரூ.300, ரூ.80க்கு விற்ற சூடைமீன் ரூ.100க்கு விற்பனையானது. இன்னும் மீன்களின் விலை அதிகரிக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.இதனிடையே மீன்வரத்து குறைவால் கருவாடு விற்பனை சூடுபிடித்துள்ளது.
இதனால் ராமேஸ்வரம் மார்க்கெட்டில் உள்ளூர் வாசிகள் மட்டுமல்லாது, வெளியூரிலிருந்து வரும் சுற்றுலா பயணிகளும் கருவாடு வாங்கி செல்கின்றனர்.ராமேஸ்வரம் மார்க்கெட்டில் நேற்று ஒரு கிலோ நெத்திலி கருவாடு ரூ.200, பண்ணா கருவாடு ரூ.250, நகரை கருவாடு ரூ.150, திருக்கை கருவாடு ரூ.100, சூடை கருவாடு ரூ.80க்கு விற்பனையானது. இந்த நிலை இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று கருவாடு வியாபாரிகள் தெரிவித்தனர்.