திருத்தணி நகராட்சி வணிக வளாகத்தில் ஆக்கிரமிக்கும் வாகனங்கள் : சமூக விரோதிகள் ஊடுருவல்
4/19/2016 2:12:52 PM
திருத்தணி: திருத்தணியில் உள்ள மேட்டு தெருவில், கடந்த ஆண்டு நகராட்சி நிதியில் இருந்து ரூ. 5 லட்சம் செலவில் 5 கடைகள் கொண்ட வணிக வளாகம் கட்டப்பட்டது.இந்த 5 கடைகளுக்கும் இன்னும் கதவுகள் அமைக்கப்படாமல் திறந்தவெளி பகுதியாக கட்டப்பட்டு உள்ளது. இந்த வணிக வளாகத்தில் சமூக விரோதிகள் ஊடுருவி, அதை வாகன நிறுத்துமிடம், நடைபாதைவாசிகள் குடித்தனம் நடத்தும் இடமாகவும், இரவுநேர பாராகவும் பயன்படுத்தி வருகின்றனர்.கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கட்டி முடிக்கப்பட்ட இந்த வணிக வளாகத்தை இன்னும் பயன்பாட்டுக்கு கொண்டு வராம திருத்தணி நகராட்சி கிடப்பில் போட்டுள்ளது. இதனால் அந்த 5 கடைகளின் தரைகளும் பெயர்ந்து குண்டு குழியுமாக காட்சி அளிக்கிறது.
‘இந்த வணிக வளாகத்தில் 5 கடைகள் கட்டி முடித்து இன்றுவரை வியாபாரிகளுக்கு வழங்காமல் நகராட்சி அதிகாரிகள் கிடப்பில் போட்டுள்ளனர். இதனால் கதவுகளே இல்லாத அந்த வணிக வளாகம் பல்வேறு சமூகவிரோத செயல்களுக்கு பயன்பட்டு வருகிறது.எனவே, இந்த வணிக வளாகத்தில் உள்ள 5 கடைகளுக்கும் கதவுகள் அமைத்து, அந்த வளாகத்தை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.