பேருந்து நிறுத்தங்களை ஆக்கிரமிக்கும் வாகனங்கள் அதிகாரிகள் மெத்தனம், பயணிகள் அவதி
4/2/2025 12:13:52 PM
சென்னை நகரில் நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் அண்ணாசாலை, ராயப்பேட்டை, அரும்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய சாலைகளில் உள்ள பஸ் நிறுத்தங்களில் ஏராளமான மொபைல் வொர்க்ஷாப்கள் அதிகரித்து வருகின்றன. இதனால் அப்பகுதிகயில் ஏராளமான வாகன நெரிசல் ஏற்படுவதுடன், மாநகர பேருந்துகளும் திக்கி திணறி செல்லும் அவலநிலை காணப்படுகிறது.அப்பகுதிகளில் போலீசார் பணியில் இருந்தும், அவர்கள் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணிகளில் ஈடுபடுவதில்லை. அதற்கு பதில் சாலையோரமாக நின்றுகொண்டு, இருசக்கர வாகன ஓட்டிகளிடம் பணம் வசூலிப்பதில் குறியாக உள்ளனர். இதனால் வாகன ஓட்டிகள் நெரிசலில் சிக்கி அவதிப்பட வேண்டியுள்ளது.
என்று பொதுமக்கள் கூறுகின்றனர்.உதாரணமாக, அண்ணாசாலைக்குப் பின்புறம் ஒருவழி பாதையாக உள்ள ராயப்பேட்டை, ஜி.பி.சாலை எப்போதும் போக்குவரத்து நெரிசலுடன் காணப்படும். ஏனெனில், இங்கு ஏராளமான கார் உதிரிபாகங்கள் மற்றும் கார் உள்அலங்கார கடைகளும் உள்ளன. இதனால் இங்குள்ள பயணிகள் நிழற்குடையை ஒருசிலர் ஆக்கிரமித்து, அங்கு கார் உள்ளிட்ட வாகனங்களை பழுதுபார்க்கும் வொர்க்ஷாப்பாக மாற்றிவிட்டனர். பஸ் நிறுத்தத்தை ஒட்டி கார்கள் நின்றிருக்க, பயணிகள் அனைவரும் சாலையில் நின்று, தாங்கள் ஏறவேண்டிய பேருந்து எங்கு நிற்கிறதோ, அதைப் பிடிப்பதற்கு நாள்தோறும் வாகனங்களுக்கு இடையே ஓடிவருகின்றனர். இதனால் அங்கு சிறு விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது.
இதையடுத்து, ராயப்பேட்டை மணிக்கூண்டு அருகே 4 முனை சாலை சந்திப்பில் மிகப் பிரபல வணிக வளாகமும் சினி காம்ப்ளெக்சும் உள்ளது. இந்த வளாகத்தை ஒட்டி அண்ணாசாலை செல்லும் வழியில், சாலையை மறித்தபடி ஏராளமான ஆட்டோக்கள் வரிசை கட்டி நிற்கின்றன.நெரிசல் மிக்க சாலையில் போலீசார் பணியில் இருந்தாலும், அவர்கள் இந்த ஆட்டோக்களை கண்டுகொள்வதில்லை. இதற்காக போலீசார் ஸ்பெஷலாக கவனிக்கப்படுகின்றனர் என்று வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டுகின்றனர்.இதேபோல், அண்ணாநகர் ஆர்ச் அருகே சித்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே ஆளுங்கட்சியினரின் ஆதாயத்துக்காக, அடுத்தடுத்து 5 பஸ் நிறுத்தங்கள் உள்ளன. அந்தளவுக்கு இப்பகுதியில் மாநகர பேருந்து வழித்தடங்கள் உள்ளதா என்று கேட்டால், மாநகர போக்குவரத்து அதிகாரிகளுக்கே பதில் தெரியவில்லை.
இந்த 5 பஸ் நிறுத்தங்களில் 4 நிறுத்தங்களை மினி சரக்கு லாரிகளும் ஷேர் ஆட்டோக்களும் ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டு உள்ளன. அங்கேயே அந்த வாகனங்களையும் பராமரித்து வருகின்றனர். மேற்கூரை உடைந்து, ஓட்டை உடைசலுடன் காணப்படும் மீதியுள்ள ஒரு பஸ் நிறுத்தத்தில் கட்டிட கழிவுகளுக்கு இடையே, பேருந்துக்காக பயணிகள் காத்திருக்க வேண்டிய அவலநிலை உள்ளது. இந்த பஸ் நிறுத்தங்களை ஒட்டியே ஏராளமான சரக்கு வேன்கள் நின்றிருப்பதால், அவ்வழியாக வரும் மாநகர பேருந்துகள் சாலையிலேயே நிறுத்தி பயணிகளை இறக்கிவிட்டு செல்கின்றன. இதுகுறித்து மாநகர போக்குவரத்து அதிகாரிகளிடமும் போலீசாரிடமும் பொதுமக்கள் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதைத் தவிர, தற்போது கோயம்பேடு ஜவஹர்லால் நேரு சாலை, வடபழனி, வளசரவாக்கம், அரும்பாக்கம் மற்றும் அமைந்தகரை உள்ளிட்ட பூந்தமல்லி நெடுஞ்சாலை, புரசைவாக்கம் நெடுஞ்சாலை ஆகிய பகுதிகளில் அளவுக்கு அதிகமாக பொருட்களை ஏற்றிச் செல்லும் மினி சரக்கு லாரிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன.உதாரணமாக, கோயம்பேடு ஜவஹர்லால் நேரு சாலையில் கடந்த சில நாட்களுக்கு முன் பிரமாண்ட கழுகு சிலையை ஏற்றிக்கொண்டு மினி சரக்கு லாரி ஒன்று எழும்பூரை நோக்கி வேகமாக சென்றது. அந்த லாரிக்கு அருகே வாகனங்களில் வந்தவர்கள், அந்த கழுகு பொம்மை காற்றில் நம்மீது எங்கே விழுந்துவிடுமோ என்ற அச்சத்தில் மினி லாரியை விட்டு சிறிது தூரம் தள்ளியே சென்றனர்.
இத்தனைக்கும் அப்பகுதியில் போக்குவரத்து போலீசார் பணியில் இருந்தும், இதுபோன்ற அதிகளவு பாரத்தை ஏற்றிச்செல்லும் சரக்கு லாரியை கண்டுகொள்ளவில்லை. இதேபோல் சென்னை கடற்கரை சாலை உள்ளிட்ட பல்வேறு முக்கிய சாலைகளில் அனுமதிக்கப்படாத நேரங்களில் வரும் சரக்கு வாகனங்களை போலீசார் தடுத்து நிறுத்தி, அவர்களிடம் வெயிட்டாக அன்பளிப்புகளைப் பெற்றுக்கொண்டு, சென்னை நகர சாலைகளில் அனுமதித்து வருகின்றனர் என்று பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதுகுறித்து ஒருசில போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் போலீசாரிடம் கேட்டதற்கு, ‘இத்தகைய அதிகளவு பாரங்களை ஏற்றிவரும் சரக்கு வாகனங்களின் உரிமையாளர்கள் பெரும்பாலும் ஆளுங்கட்சி முக்கிய புள்ளிகளுக்கு சொந்தக்காரர்களாகவே உள்ளனர்.பஸ் நிறுத்தங்களில் நிற்கும் வாகன உரிமையாளர்களிடம் நாங்கள் கேள்வி கேட்டால், அடுத்த நிமிடமே எங்களது உயர் அதிகாரிகளிடம் இருந்து போனில் டோஸ் விழுகிறது. இதனால் நாங்கள் அதிக லோடுன் வரும் சரக்கு வாகனங்களை கண்டுகொள்வது இல்லை. இதனால் எங்களுக்கு அதிக மனஅழுத்தம் ஏற்பட்டு வருகிறது என்று வேதனையுடன் கூறுகின்றனர்.