விரிவுபடுத்தப்பட்ட நடைபாதைகளில் வாகனங்கள் ஆக்கிரமிப்பு விபத்துகள் அதிகரிப்பு, பொதுமக்கள் அச்சம்
3/24/2016 2:13:10 PM
சென்னை நகரில் மயிலாப்பூர், தி.நகர், அடையாறு, பெசன்ட்நகர் மற்றும் கே.கே.நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வாகன நெரிசல் மிகுந்த பகுதிகளில் சென்னை மாநகராட்சி திடீரென சாலையோர பிளாட்பாரங்களின் அகலப்படுத்தும் பணிகளை தீவிரமாக முடுக்கிவிட்டுள்ளனர்.இதனால் அப்பகுதிகளில் விரிவாக்கப்பட்ட பிளாட்பாரம் பகுதிகளில் அப்பகுதியை சேர்ந்தவர்களின் கார், ஆட்டோ உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் எந்நேரமும் ஆக்கிரமித்து உள்ளன. இதனால் அப்பகுதிகளில் நாள்தோறும் ஏராளமான விபத்துகள் நடைபெற்று வருகின்றன.
உதாரணமாக, திருவான்மியூர் எல்.பி. சாலையில் 3 மீட்டர் அகலம் இருந்த நடைபாதையை சென்னை மாநகராட்சி குறுகிய காலத்தில் 8 மீட்டர் அகலத்துக்கு பெரிதுபடுத்தியது. அந்த நடைபாதையின் துவக்கத்தில் தடுப்பு கற்களை வைத்து தடுத்துவிட்டதால், அவ்வழியாக சைக்கிள்கள்கூட செல்ல முடியவில்லை.இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அப்பகுதி நடைபாதை வியாபாரிகள், தங்களின் டீக்கடை, இளநீர் உள்ளிட்ட பல்வேறு கடைகளைப் போட்டு, அகலப்படுத்தப்பட்ட நடைபாதைகளை ஆளுங்கட்சி தரப்பு ஆட்கள் ஆக்கிரமித்துவிட்டனர். தற்போது சுமார் 50-க்கும் மேற்பட்ட கடைகள் அகலமான நடைபாைதயில் உள்ளன என்று பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
அடுத்ததாக, மிகப் பெரிய சாலையாக இருந்த மயிலாப்பூர், லஸ் சர்ச் சாலையில் நவசக்தி விநாயகர் கோயிலுக்கு பின்புறம் உள்ள பகுதியில் இருந்து அமிர்தாஞ்சன் வரையுள்ள ஒருபக்க சாலையில் 8 மீட்டர் அளவுக்கு நடைபாதையை அகலப்படுத்தும் பணி நடைபெற்றது. இதேபோல், சென்னை மேற்கு கே.கே.நகரில் உள்ள லட்சுமணசாமி சாலை, முனுசாமி சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைகளின் இருபக்கமும் நடைபாதைகளை 8 மீட்டர் அளவுக்கு விரிவாக்கும் பணிகளை சென்னை மாநகராட்சி வெற்றிகரமாக முடித்துவிட்டது. இதனால் அந்த சாலைகள் மேலும் குறுகி, ஒரு மாநகர பேருந்து வந்தாலே, எதிரே வரும் வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்கு உள்ளாகும் அவலநிலை நீடித்து வருகிறது.
மேலும், இப்பகுதிகளில் விரிவாக்கப்பட்ட நடைபாதையில் மக்கள் நடமாட முடியாத அளவுக்கு, அப்பகுதியில் உள்ளவர்கள் தங்களது கார்கள், சரக்கு வேன்கள் மற்றும் நடைபாதை கடைகளைப் போட்டுள்ளனர். மேலும், அங்குள்ள ஒரு பிரபல தனியார் பள்ளியில் குழந்தைகளை அழைத்து செல்ல வரும் கார்களும் வேன்களும் இந்த நடைபாதையை ஆக்கிரமித்து நாள் முழுவதும் நிறுத்தி வைக்கப்படுகின்றன. இதேபோல், அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தின் அனைத்து கார்களும் இந்த நடைபாதையை ஆக்கிரமித்து 24 மணி நேரமும் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பலரும் தங்களது கார்களை வீட்டுக்குள் நிறுத்தாமல், இத்தகைய விரிவான பிளாட்பாரங்களில் பார்க்கிங் செய்து வருகின்றனர்.
இதனால் இப்பகுதிகளில் காலை, மதியம் மற்றும் மாலையில் நெரிசல் மிக்க நேரங்களில் குறுகலாக்கப்பட்ட சாலையில் செல்ல முடியாமல் இருசக்கர வாகனங்களும் கார்களும் அடிக்கடி விபத்துக்கு உள்ளாகி வருகின்றன. மேலும், இப்பகுதியை சேர்ந்தவர்கள் தங்களது இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களில் அலுவலகம் மற்றும் முக்கிய பணிகளுக்கு செல்ல வேண்டியவர்கள், இப்பகுதியில் செயற்கையாக ஏற்படுத்தப்பட்ட நெரிசலில் சிக்கி தவித்து வருகின்றனர்.‘லட்சுமணசாமி சாலை, முனுசாமி சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள சாலைகளில் ஏற்கெனவே மாநகர பேருந்துகள் சென்றாலே, எதிர்வரும் வாகனங்களுக்கு வழி இருக்காது. மேலும், இச்சாலைகளில் அடிக்கடி பள்ளம் தோண்டப்பட்டு, அவை சரியாக மூடப்படாமல் புதைகுழிகளாக காட்சியளித்து வந்தன. சமீபத்தில்தான் தார்சாலை போட்டார்களே என்று சந்தோஷப்பட்டோம்.
ஆனால், அதற்குப் பின்னால் இப்படியொரு இடி எங்கள் தலையில் விழும் என்று இப்பகுதி மக்கள் பெரிதும் எதிர்பார்க்கவில்லை. திடீரென சாலையின் இருபக்கமும் 8 மீட்டர் அளவுக்கு சாலைகள் தோண்டப்பட்டன. பின்னர் ஒரே வாரத்தில் அங்கு நடைபாதைகள் அகலமாக்கப்பட்டு கற்கள் பதிக்கப்பட்டன. இதனால் அந்த நடைபாதைகளில் தற்போது கார்களும் சரக்கு வேன்களும் ஆக்கிரமித்து எந்நேரமும் நிற்கின்றன.பொதுமக்கள் நடப்பதற்காக சென்னை மாநகராட்சி நடைபாதையை அகலப்படுத்தவில்லை. யாரோ சில நலம்விரும்பிகளுக்காகவே இப்பணிகளை செய்துள்ளனர். இதன்மூலம் ஆளுங்கட்சி முக்கிய நிர்வாகிகளும் சென்னை மாநகராட்சியின் தலை முதல் கீழ்நிலையில் உள்ள அதிகாரிகள் வரை பெருமளவில் சம்பாதித்து விட்டனர்.
நாங்கள் மீண்டும் அவதிப்பட்டு வருகிறோம்’ என்று மேற்கு கே.கே.நகரை சேர்ந்த பெரும்பாலான மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.இதற்கு சென்னை மாநகராட்சி தரப்பில் எவ்வித விளக்கமும் தரப்படவில்லை. எனினும், பிரச்னை வராத பகுதிகளில் அவர்கள் நடைபாதைகளை அகலமாக்கும் பணிகளில், தங்களின் சொந்த ஆதாயத்துக்காக ஆளுங்கட்சியினரும் மாநகராட்சி அதிகாரிகளும் தீவிரமாக ஈடுபட்டு சம்பாதித்து வருகின்றனர். இதற்கு அப்பகுதி மக்கள் பலிகடா ஆக்கப்படுகின்றனர்.இந்த நடைபாதைகளை ஆளுங்கட்சி தரப்பை சேர்ந்தவர்கள் ஆக்கிரமித்து, அங்கு தங்களது கடைகளை போட்டு, அப்பாவி ஏழைகளிடம் வாடகை வசூலித்து வருகின்றனர் என்று சமூக ஆர்வலர்களும் குற்றம்சாட்டுகின்றனர்.