செம்பாக்கம் நகராட்சியில் விதிகளை மீறி கட்டிடம் கட்டும் பணி அதிகாரிகள் மெத்தனம்
3/23/2016 2:56:14 PM
தாம்பரம்: சென்னை தாம்பரத்தை அடுத்த செம்பாக்கம் நகராட்சி, 14வது வார்டான இம்மானுவேல் தெருவில், குடியிருப்பு கட்ட தனியார் ஒருவர் அனுமதி பெற்று, அங்கு விதிகளை மீறி விடுதி கட்டி வருகிறார். இதுகுறித்து அதே பகுதியை சேர்ந்த சாமுவேல் என்பவர், நகராட்சியில் குடியிருப்பு பகுதியில் விதிகளை மீறி விடுதி கட்டப்படுவதாக கடந்த ஜூன் மாதம் செம்பாக்கம் நகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தார்.
ஆனால், இதுவரை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.இதையடுத்து, இதுகுறித்து சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்திடமும் சாமுவேல் புகார் அளித்தார். இப்புகாரை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என செம்பாக்கம் நகராட்சிக்கு உத்தரவிடப்பட்டது. ஆனால், இந்த உத்தரவு குறித்து செம்பாக்கம் நகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை.மேலும், புகார்தாரரின் ஆறுதலுக்காக சம்பந்தப்பட்ட இம்மானுவேலுவுக்கு நகராட்சி சார்பில் நோட்டீஸ் மட்டும் வழங்கி, விதிமீறி கட்டப்படும் கட்டிடம் குறித்து எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் இருக்கிறது.
இதுகுறித்து புகார்தாரர் கூறுகையில், செம்பாக்கம் நகராட்சியில் விதிகளை மீறி கட்டப்படும் கட்டிடம் குறித்து பலமுறை புகார் தெரிவித்தும், அதிகாரிகள் இதுவரை நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாக உள்ளனர்.தமிழகத்தில் விதிகளை மீறி கட்டப்பட்ட பல்வேறு கட்டிடங்கள் இடிந்து விழுந்து ஏராளமான உயிரிழப்புகளை ஏற்படுத்தி உள்ளன. இங்குள்ள கழிவுகள் நேரடியாக மழைநீர் கால்வாயில் விடப்படுகிறது. இதுபோல் பல்வேறு அத்துமீறல்கள் தொடர்ந்து நடைபெறாமல் இருக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாக செயல்படுகின்றனர், இதுகுறித்து விரைவில் நீதிமன்றத்தை அணுகுவேன் என்று புகார்தாரர் கூறினார்.