ஆம் ஆத்மி அரசுக்கு கவர்னர் நஜீப் பாராட்டு
3/23/2016 2:24:04 PM
புதுடெல்லி: டெல்லியில் முதல்வர் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு முன் எப்போதும் கண்டிராத வகையில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது என கவர்னர் நஜீப் ஜங் பாராட்டியுள்ளார். டெல்லியில் முதல்வர் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு பதவியேற்று ஓராண்டு முடிந்து விட்டது. இந்நிலையில் இந்த ஆண்டு பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் கவர்னர் நஜீப் ஜங் உரையுடன் அவை நடவடிக்கைகள் தொடங்கின. அப்போது நஜீப் ஜங் தனது உரையில் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசின் சாதனைகளை பட்டியலிட்டு காட்டினார். மேலும் முன் எப்போதும் காணாத வகையில் டெல்லியில் ஆம் ஆத்மி அரசு சாதனை படைத்துள்ளது என்றும் பாராட்டினார். கல்வி, சுகாதாரம், போக்குவரத்து ஆகியவற்றில் ஆம் ஆத்மி அரசு குறிப்பிடத்தக்க அளவில் சாதனைகளை புரிந்து வருகிறது என்றும் சுட்டி காட்டினார். அதே நேரத்தில் கெஜ்ரிவால் அரசின் பட்ஜெட் மசோதாக்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டு–்ம் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.
மேலும் தனது உரையில், ஆம் ஆத்மி அரசு டெல்லி முழுவதும் பல்வேறு இடங்களில் 1000 மக்கள் மருந்தகங்களை அமைக்க உள்ளது. இதில் ஏற்கனவே ஒரு மருந்தகம் பரிசோதனை முயற்சியாக டெல்லியில் உள்ள பீரகார்கி பகுதியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் பொது மருத்துவமனைகள் அனைத்திலும் மக்களுக்கு இலவசமாக மருந்துகள் கிடைக்கவும் ஆம் ஆத்மி அரசு ஏற்பாடு செய்து வருகிறது என்றும் தெரிவித்தார்.டெல்லி அரசு ஜனவரி மாதம் சுற்றுசூழல் மற்றும் போக்குவரத்து நெருக்கடியை சமாளிப்பதற்காக மாற்று நாட்களில் மாற்று எண் வாகன திட்டத்தை அறிமுகம் செய்தது. இதை மீண்டும் ஏப்ரல் 15 முதல் தொடங்க உள்ளது என்றும் தெரிவித்தார்.கவர்னருக்கும், ஆம் ஆத்மி அரசுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வரும் வேளையில், கவர்னர் உரையில் ஆம் ஆத்மி அரசை நஜீப் ஜங் பாராட்டியுள்ளது கவனிக்கத்தக்கது.