இன்ஸ்பெக்டர் மனைவி கொலை வழக்கில் 6 பேருக்கு இரட்டை ஆயுள் திருப்பூர் கோர்ட் தீர்ப்பு
3/23/2016 2:14:11 PM
திருப்பூர்: திருப்பூரில் ஓய்வுபெற்ற இன்ஸ்பெக்டரின் மனைவியை கொன்று, கொள்ளையடித்த வழக்கில் 6 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது.திருப்பூர் விஜயாபுரம் பகுதியில் வசிப்பவர் ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளர் பழனிச்சாமி (60). இவரது மனைவி தங்கம்(55). தம்பதியர் காங்கயம் ரோடு, விஜயாபுரம் பிரிவு பகுதியில் வசித்தனர்.இந்நிலையில், கடந்த 2012ம் ஆண்டு ஆகஸ்ட் 1 ம் தேதி இரவு தங்கம் வீட்டில் தனியாக இருந்த போது, வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் தங்கத்தை கொலை செய்துவிட்டு வீட்டிலிருந்த 18 பவுன் மற்றும் ரூ.15 ஆயிரத்தை கொள்ளையடித்து தப்பினர். இதில் தொடர்புடைய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவ்வழக்கு, திருப்பூர் 2வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில், நீதிபதி முகம்மது ஜியாவுதீன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, கொலை, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட திருநெல்வேலியை சேர்ந்த ஏசுதாஸ் (எ) தாஸ், மாயாண்டி(19), சுப்புராஜ் (24), தங்கராஜ் (20), பிரபாகரன்(21), தங்கராஜன்(26) ஆகிய 6 பேருக்கும் இரட்டை ஆயுள் தண்டனையும், தலா ரூ.2 ஆயிரம் அபராதமும் வழங்கி தீர்ப்பளித்தார்.இந்த தண்டனையை குற்றவாளிகள் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி முகம்மது ஜியாவுதீன் தீர்ப்பு வழங்கினார்.