கேண்டிடேட்ஸ் செஸ் தொடர் 9ம் சுற்றில் ஆனந்த் வெற்றி
3/22/2016 2:20:48 PM
மாஸ்கோ: கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியின் 9ம் சுற்றில் இந்திய வீரர் விஸ்வநாதன் ஆனந்த் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார்.நடப்பு உலக செஸ் சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனுடன், உலக சாம்பியன்ஷிப்பில் மோதும் போட்டியாளரை நிர்ணயிப்பதற்கான கேண்டிடேட்ஸ் செஸ் போட்டி ரஷ்யாவில் மாஸ்கோ நகரில் நடந்து வருகிறது. 9ம் சுற்று ஆட்டங்கள் நேற்று நடந்தன.
அமெரிக்க வீரர் ஹிகாரு நகாமுரா, செர்ஜி கார்ஜாகினுடன் மோதினார். குயின்ஸ் இந்தியன் டிபன்ஸ் முறையில் ஆடப்பட்ட இந்த ஆட்டம் 44 நகர்த்தல்களுக்கு பின் டிராவில் முடிவடைந்தது. கிராண்ட் மாஸ்டர் வாசெலின் தாபாலோவ், பீட்டர் ஸ்விட்லர் இடையிலான ஆட்டத்தில் 47 நகர்த்தல்களுக்கு பின்னும் முன்னேற்றம் காணப்படாததால் இருவரும் டிரா செய்ய ஒப்புக் கொண்டனர். நெதர்லாந்து வீரர் அனீஷ் கிரி, பாபியானோ கரூணா இடையிலான மோதலில் இருவரும் தந்திரமான நகர்த்தல்களை மேற்கொண்டதால் ஆட்டம் நீண்ட நேரம் நீடித்தது.
96 நகர்த்தல்கள் வரை நீடித்த இந்த ஆட்டத்தில் வெற்றி வாய்ப்பு தென்படாததை அடுத்து டிராவுக்கு இருவரும் ஒப்புக் கொண்டனர். முன்னாள் உலக சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்த், ஆர்மேனிய வீரர் லெவோன் ஆரோனியனை எதிர் கொண்டார். வெள்ளைக்காய்களுடன் ஆட்டத்தை துவக்கிய ஆனந்த் இத்தாலிய முறையில் ஆடினார். துவக்கத்திலேயே ஆனந்துக்கு சற்று சாதகமான சூழ்நிலை தென்படத் தொடங்கியது. பின்னர், தனது வழக்கமான பாணியில் அதிரடியாக ஆடி ஆரோனியனின் கருப்பு காய்களை வெட்டி வீழ்த்தத் துவங்கினார். 66வது நகர்த்தலின் போது ஆரோனியன் தனது தோல்வியை ஒப்புக் கொண்டார். இந்த வெற்றியைத் தொடர்ந்து விஸ்வநாதன் ஆனந்த் 5.5 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை செர்ஜி கார்ஜாகினுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.