போலி நிகழ்ச்சிகள் மூலம் வாக்காளர்களுக்கு விருந்தா? திருமண மண்டபங்களுக்கு எச்சரிக்கை
3/22/2016 2:13:51 PM
திருச்சி: திருமண மண்டபங்கள் மற்றும் இதர சமுதாயக் கூடங்களின் உரிமையாளர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் நடந்தது. இதில் சட்டமன்ற தேர்தலையொட்டி திருமண மண்டபங்கள் மற்றும் இதர சமுதாயக் கூடங்களின் உரிமையாளர்கள் பின்பற்ற வேண்டிய தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து அதிகாரிகள் தெரிவித்தனர்.அவை பின்வருமாறு:தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள போது கல்யாண மண்டபங்கள் மற்றும் இதர சமுதாயக்கூடங்களை காதுகுத்து, வளைகாப்பு, மற்றும் பிறந்த நாள் விழாக்கள் என்ற பெயரிலோ அல்லது அரசியல் கட்சிப் பிரமுகர்களுக்கு வாடகைக்கு அளிக்கும் போதோ அதன் விவரத்தை உடனடியாக தேர்தல் நடத்தும் அலுவலர், ஆர்டிஓ அல்லது தாசில்தார் ஆகியோருக்கு தெரிவிக்க வேண்டும்.மண்டபங்களில் வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள், வேட்டி சேலைகள் போன்றவை வழங்கப்படுவது முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது. மண்டபங்களில் போலியான நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வாக்காளர்களுக்கு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், கோயில் பூஜை, அன்னதானம் என்ற பெயரில் வேட்பாளர்களோ அல்லது அவர்களது முகவர்களோ வாக்காளர்களுக்கு விருந்து வைப்பதும் தடை செய்யப்பட்டுள்ளது.