ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி தேர்தல் அதிகாரிகள் பங்கேற்பு
3/19/2016 12:30:27 PM
தண்டையார்பேட்டை: தமிழகத்தில் வரும் மே 15ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவு நடைபெற வேண்டும் என்பதை வலியுறுத்தி தேர்தல் ஆணையம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதியில் கடந்த ஒரு வாரமாக தேர்தல் அதிகாரி பத்மஜா தலைமையில் விழிப்புணர்வு பிரசாரம் நடந்து வருகிறது. நேற்று புதுவண்ணாரப்பேட்டை கிராஸ் ரோடு அருகே ‘வாக்குரிமை மக்களின் உரிமை’ என்பதை வலியுறுத்தி, விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடந்தது. இதில் வீதி நாடகம் நடந்தது. பின்னர், பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. மேலும், அந்த பகுதி முழுவதும் ஒலிப்பெருக்கி மூலம் ஆட்டோவில் விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.இதுகுறித்து தேர்தல் அதிகாரிகள் கூறுகையில், விழிப்புணர்வு தேர்தல் பிரசாரம் தினமும் நடக்கும். வீடு வீடாக சென்று வாக்காளர்களுக்கு ஆலோசனை வழங்கி, வாக்களிப்பது உரிமை என்பதை தெளிவுபடுத்துவோம். அதே நேரத்தில் வாக்களிக்க பணம் கொடுக்கவும் கூடாது, வாங்கவும் கூடாது எனவும், அப்படி செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்துவோம் என்றனர்.