திருச்சியில் நாளை திராவிடர் கழக மாநாடு மு.க. ஸ்டாலின், இளங்கோவன் பங்கேற்பு
3/18/2016 3:02:11 PM
திருச்சி: திராவிடர் கழக 2 நாள் மாநாடு திருச்சி அடுத்த சிறுகனூரில் நாளை காலை 9.30 மணிக்கு துவங்குகிறது. முதல் நாள் மாநாட்டுக்கு சாதி தீண்டாமை ஒழிப்பு மாநாடு என பெயரிடப்பட்டு உள்ளது.மாநாட்டு திடலுக்கு பெரியார் உலகம் என பெயரிடப்பட்டுள்ளது. மாநாட்டு அரங்கத்திற்கு அன்னை நாகம்மையார், அன்னை மணியம்மையார் ஆகியோரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.மாநாட்டையொட்டி கண்காட்சியும் நடக்கிறது. குஜராத் ஐகோர்ட் முன்னாள் நீதிபதி கோகுல கிருஷ்ணன் கண்காட்சியை திறந்து வைக்கிறார். திராவிடர் கழக துணைத்தலைவர் கலி.பூங்குன்றன் தலைமையில் தலைவர்களின் படத்திறப்பு விழா நடக்கிறது. திருச்சி மாவட்ட திமுக செயலாளர் கே.என். நேரு அண்ணா படத்தை திறந்து வைக்கிறார். இதுபோல பல்வேறு தலைவர்களின் படங்கள் மாநாட்டில் திறந்து வைக்கப்படுகிறது.
2ம் நாள் மாநாடு: 2ம் நாள் மாநாடு சமூகநீதி மாநாடாக நடக்கிறது. திராவிடர் கழக தலைவர் வீரமணி தலைமை தாங்குகிறார். மாநாட்டில் திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், முன்னாள் மத்திய அமைச்சர் நாராயணசாமி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன், ஓய்வுபெற்ற நீதிபதி ஹரி பரந்தாமன், சுப. வீரபாண்டியன், நடிகை குஷ்பு உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள். இந்த தகவலை திருச்சியில் இன்று தி.க. தலைவர் வீரமணி கூறினார்.