ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு கர்நாடக ஐகோர்ட் கணக்கு பிழை தீர்ப்பையே சிதைப்பதாக உள்ளது சுப்ரீம் கோர்ட்டில் அரசு வக்கீல் வாதம்
3/15/2016 3:19:13 PM
புதுடெல்லி: வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தமிழக முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, வளர்ப்பு மகன் சுதாகரன் மற்றும் அவரது உறவினர் இளவரசி ஆகியோர் மீது தமிழக லஞ்ச ஒழிப்பு துறை தொடர்ந்த வழக்கில், ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோருக்கு தலா 4 ஆண்டு சிறை தண்டனையும், ஜெயலலிதாவிற்கு ரூ.100 கோடியே ஒரு லட்சம் அபராதமும், மற்ற மூவருக்கும் தலா ரூ.10 கோடியே 10 ஆயிரம் அபராதமும் விதித்து சிறப்பு நீதிபதி மைக்கேல் டி குன்ஹா தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேர் சார்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி, ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோரை வழக்கிலிருந்து விடுதலை செய்து கடந்த ஆண்டு மே 11ல் உத்தரவிட்டார்.
கர்நாடக உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து கர்நாடக அரசு மற்றும் திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் ஆகியோர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திர கோஸ், அமித்தவா ராய் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது. கடந்த மாதம் 23ம் தேதி தொடங்கிய இறுதி விசாரணையில், 4 நாட்கள் கர்நாடக தரப்பு மூத்த வக்கீல் துஷ்யந்த் தவே வாதிட்டார்.
அவர் வாதிடும்போது, இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளி தற்போதும் முதல்வராக உள்ளார். முறைகேடாக வந்த பணத்தை வருமானமாக உயர் நீதிமன்றம் கணக்கில் கொண்டுள்ளது. ஒவ்வொரு பாகத்தையும் விசாரணை நீதிமன்றம் கணக்கில் கொண்டது போல் உயர் நீதிமன்றம் கணக்கில் கொள்ளவில்லை. எனவே உயர் நீதிமன்றத்தின் கணக்கீடுகள் மற்றும் வழக்கை கருத்தில் கொண்ட விதம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்து, விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்ய வேண்டும் என்று வாதிட்டார்.
இதை தொடர்ந்து, கர்நாடக அரசு வக்கீல் ஆச்சார்யா இன்று 5வது நாளாக வாதிட்டார். அவர் வாதிட்டதாவது: இந்த வழக்கு தொடங்கப்பட்டதிலிருந்தே தாமதப்படுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகள் குற்றவாளிகள் தரப்பில் எடுக்கப்பட்டது. 1991 முதல் 96 வரையிலான காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக ரூ.66 கோடி சொத்து சேர்த்ததாக முதலில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதை தொடர்ந்து 2001ம் ஆண்டு ஜெயலலிதா மீண்டும் முதல்வராக பதவி ஏற்றபோது இந்த வழக்கை முடக்குவதற்கும், சிதைப்பதற்கும் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. அதன் ஒரு பகுதியாக 76 சாட்சிகள் பிறழ் சாட்சியாக மாறியது.
அதை தொடர்ந்து தான் உச்சநீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு வழக்கு கர்நாடகா மாநிலத்துக்கு மாற்றப்பட்டது. எனவே இந்த வழக்கில் மேல்முறையீடு செய்ய கர்நாடகா அரசுக்கு முழு உரிமை உள்ளது. சிறப்பு நீதிமன்றத்தில், வழக்கில் முதல் குற்றவாளியான ஜெயலலிதா நேரடியாக ஆஜராகி பதிலளிக்க மறுத்து வந்தார். உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து தான் அவர் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானார். மேலும் சிறப்பு அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்ட பவானிசிங் நீக்கப்பட்டதை தொடர்ந்து அதை எதிர்த்து குற்றவாளிகள் தரப்பில் வழக்கு தொடர்ப்பட்டது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் ஆஜராகாததற்கு கண்டனம் தெரிவித்து ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்தை அபராதமாக சிறப்பு நீதிமன்றம் விதித்தது. கடைசியாக கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் ஆஜராகலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டபோது வழக்கின் விசாரணையே முடிந்து விட்டது. அதை தொடர்ந்து எங்கள் தரப்பு வாதத்தை எழுத்து பூர்வமாக பதிலளிக்க உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது. அதை தொடர்ந்து ஒரு நாள் அவகாசத்தில் நாங்கள் 50 பக்க ஆவணங்களை தாக்கல் செய்தோம். அதை உயர்நீதிமன்றம் தீர்ப்பின் போது கருத்தில் கொள்ளவில்லை. மேலும் நேரடியாக எங்களது வாதத்தையும் முன்வைக்க முடியவில்லை. உயர்நீதிமன்ற தீர்ப்பில் அனைத்துமே சரிதான் என வாதத்துக்கு எடுத்துக் கொண்டால் கூட, தீர்ப்பில் உள்ள கணக்கு பிழை தீர்ப்பையே அடியோடு சிதைப்பதாக உள்ளது. இவ்வாறு அவர் வாதிட்டார். இன்று மாலை வரை அவரது வாதம் நீடிக்கும் என தெரிகிறது.