5 அடி ஆழத்துக்குள் பனிச்சரிவில் சிக்கிய போலீஸ்காரர் உயிருடன் மீட்பு காஷ்மீரில் பரபரப்பு
3/15/2016 3:16:22 PM
ஸ்ரீநகர்: காஷ்மீரில் 5 அடி ஆழத்துக்குள் பனிச்சரிவில் சிக்கிய போலீஸ்காரரை ராணுவத்தினர் பத்திரமாக மீட்டனர். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
காஷ்மீரில் கூப்வாரா மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கடும் பனிப்பொழிவு உள்ளது. எங்குபார்த்தாலும் பனி உறைந்து காணப்படுகிறது. இந்நிலையில், கூப்வாரா-தங்தார் சாலையில் நேற்று தலைமை காவலர் அர்ஷாத் மிர் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அர்ஷாத் நடந்து சென்று கொண்டிருந்தபோது, திடீரென அப்பகுதியில் பனிச்சரிவு ஏற்பட்டது.
சுமார் 5 அடி ஆழத்துக்குள் உறைபனியில் அர்ஷாத் சிக்கி கொண்டார். உடன் இருந்தவர்கள் உடனடியாக ராணுவ தகவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர். மீட்பு குழுவினர் விரைந்து வந்து அர்ஷாத்தை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். போதிய வெளிச்சம் இல்லாத நிலையிலும் துரிதமாக செயல்பட்டு அர்ஷாத்தை மீட்டனர்.
உடனடியாக முதலுதவி அளிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், அவருக்கு நினைவு திரும்பியது. தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதிக பனிபொழிவு காரணமாக விபத்துக்களை தவிர்க்கும் பொருட்டு கூப்வாரா-தங்தார் சாலை மூடப்பட்டுள்ளது. கூப்வாரா பகுதியில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு பனிச்சரிவில் சிக்கி தவித்த 73 பேரை ராணுவத்தினர் மீட்டது குறிப்பிடத்தக்கது.