மே.வங்கத்தில் அரசு சாதனை விளம்பரங்களை மறைக்க தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு
3/15/2016 3:15:26 PM
புதுடெல்லி: மேற்கு வங்கம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு மார்ச் 4ம் தேதி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. இந்த மாநிலத்தில் ஏப்ரல் 4 தொடங்கி 6 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் ஏற்கனவே தொடங்கிவிட்டது. தேர்தல் தேதி அறிவித்தவுடன் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. இருப்பினும் மாநிலம் முழுவதும் ஆங்காங்கு மம்தா பானர்ஜியின் சாதனைகளை விளக்கும் பேனர்கள், போஸ்டர்கள் அகற்றப்படாமல் இருந்தது. இது குறித்து தலைமை தேர்தல் ஆணையத்துக்கு பல புகார்கள் வந்தன. இதை தொடா்ந்து அரசின் சாதனை விளம்பரங்களை உடனடியாக அகற்ற வேண்டும் என மாநில அதிகாரிகளுக்கு தலைமை தேர்தல் ஆணையம் நேற்று இரவு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
முன்னதாக தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி மற்றும் தேர்தல் ஆணையர்கள் அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் இது தொடர்பாக கொல்கத்தாவில் ஆலோசனை நடத்தினர். அப்போது அரசு துறை கட்டிடங்களில் அரசின் சாதனைகளை விளக்கும் பேனர்கள் இடம் பெற்றிருப்பதை எதிர்கட்சிகள் சுட்டிக் காட்டின. மார்ச் 4 முதல் நன்னடத்தை விதிகள் அமலில் வந்தாலும் அதை அமல்படுத்துவதில் அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருவதாக கட்சி பிரதிநிதிகள் புகார் கூறியதை தொடர்ந்து தேர்தல் ஆணையம் இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.