அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை
3/15/2016 2:43:35 PM
சென்னை: தமிழக அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி வீடியோ கான்பரன்சிங் மூலம் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் வரும் மே 16ம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. இதற்காக வாக்காளர் சேர்ப்பு, சரிபார்ப்பு, போலி வாக்காளர் மற்றும் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் பெயர்கள் உள்ளவர்கள் நீக்கம் என பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதேபோல, சட்டமன்ற தேர்தலில் வாக்களிப்பதின் அவசியத்தை வலியுறுத்தும் விதமாகவும், இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
மேலும், கல்லூரி மாணவ, மாணவிகளை வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் விதமாக கல்லூரிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அடுத்தகட்டமாக அனைத்து ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளிலும் முகாம் நடத்தப்படவுள்ளது. மேலும், திருவிழா நடைபெறும் பகுதிகள், அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகம், விஏஓ அலுவலகம், தாலுகா அலுவலகம், ஷாப்பிங் மால்கள் ஆகிய இடங்களில் வாக்களிப்பதன் அவசியம் தொடர்பான வாசகத்துடன் கூடிய பேனர்கள் வைக்கப்படும்.
அதேபோல, தேர்தலுக்கு 2 நாட்களுக்கு முன்பு ஆட்டோக்களில் ஒலிபெருக்கி மூலம் தெரு, தெருவாக விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார். இந்நிலையில், நேற்று முதல் தமிழகம் முழுவதும் 363 சேவை மையங்களில் வாக்காளர் அடையாள அட்டை வழங்கும் பணி தொடங்கியுள்ளது. அதேபோல, சென்னை மாநகராட்சியின் அனைத்து மண்டல அலுவலகங்களிலும் இதனை பெற்று கொள்ளலாம்.இதற்கிடையில், சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிக்காக துணை ராணுவத்தினர் எவ்வளவு பேர் தேவைப்படுவர் என்பது குறித்து முடிவு செய்வது தொடர்பான ஆலோசனை கூட்டம் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் தலைமையில் டெல்லியில் நேற்று காலை துவங்கியது.
இந்த கூட்டத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் நடந்தப்பட்ட ஆலோசனையின் படி கடந்த சட்டமன்ற தேர்தலை விட இந்த சட்டமன்ற தேர்தலுக்கு கூடுதல் துணை ராணுவப்படை தமிழகத்திற்கு அனுப்ப இந்திய தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி இன்று காலை 11 மணிக்கு அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் வீடியோ கான்பரசிங் மூலம் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்துகிறார்.
இதில், தேர்தல் பாதுகாப்பு, முன்னெச்சரிக்க நடவடிக்கைகள், தேர்தல் வழிமுறைகள் போன்றவை குறித்து கலந்தாலோசனை செய்யப்பட்டு வருகிறது. நாளை முதல் தமிழகம் முழுவதும் மாவட்டங்கள் வாரியாக தேர்தல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆய்வு செய்யப்படவுள்ளது. இதற்கிடையில் டுவிட்டர் சமூக வலைதளத்தின் தேசிய தலைவர் ரெவல் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியை நேற்று மதியம் சந்தித்தார். தமிழகத்தில் டுவிட்டர் சமூக வலைதளத்தை பயன்படுத்தும் மக்களிடம் தேர்தல் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான நடைமுறை சாத்தியங்கள் குறித்து அவர்கள் கலந்தாலோசித்தனர்.