10ம் வகுப்பு தேர்வு தொடங்கியது
3/15/2016 2:42:23 PM
சென்னை: பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு இன்று தொடங்கியது. கடுமையான சோதனைகளுக்கு பிறகே மாணவர்கள் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். தமிழகம், புதுச்சேரியை சேர்ந்த 12 ஆயிரத்து 54 பள்ளிகள் மூலம் 10 லட்சத்து 72 ஆயிரத்து 223 மாணவ மாணவியர் இன்று பத்தாம் வகுப்பு தேர்வு எழுதுகின்றனர். இந்த ஆண்டு தேர்வு நேரம் மாற்றப்பட்டதால் காலை 9 மணிக்கே மாணவ மாணவியர் தேர்வு அறைக்குள் வந்துவிட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இன்று காலை 8 மணிக்கே மாணவ மாணவியர் அந்தந்த தேர்வு மையங்களுக்கு வந்து சேர்ந்தனர். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கடந்த வாரமே ஹால்டிக்கெட்டுகள் வழங்கப்பட்டுவிட்டன. தனியார் பள்ளிகளை பொறுத்தவரை ஆன்லைன் மூலம் ஹால்டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து வைத்துக் கொண்டு இன்று காலைதான் மாணவ மாணவியரை பள்ளிக்கு வரவழைத்து ஹால்டிக்கெட்டுகளை ஒப்படைத்தனர். முதல் நாளான இன்று தமிழ் முதல் தாள் தேர்வு நடக்கிறது.
காலை 9 மணிக்கே அனைத்து மாணவ மாணவியரும் தேர்வு அறைக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். முன்னதாக மாணவர்களை தனியாகவும், மாணவியரை தனியாகவும் ஆசிரியர், ஆசிரியைகள் சோதனை செய்தனர். துண்டுச் சீட்டு எடுத்து செல்ல வசதியாக உள்ள சிறிய பைகள், ஜாமெட்ரி பாக்ஸ் போன்றவை எடுத்துசெல்ல அனுமதிக்கவில்லை. தண்ணீர் பாட்டில், பேனா, பென்சில், ஸ்கேல் உள்ளிட்டவை எடுத்து செல்ல அனு்மதிக்கப்பட்டது. தேர்வு அறைக்குள் சென்றதும் சரியாக 9 மணிக்கு விடைத்தாள் வழங்கப்பட்டது. அதில் உள்ள முகப்பு தாளில் மாணவர் பெயர், பதிவு எண், பாடம் உள்ளிட்ட விவரங்கள் அச்சிட்டிருந்தது. அவற்றை சரிபார்த்து மாணவர்கள் கையொப்பம் இடவேண்டும்.
இதற்காக 5 நிமிடம் ஒதுக்கப்பட்டது. அதற்கு பிறகு 9.05க்கு கேள்வித்தாள் வழங்கப்பட்டது. அதை படித்துப் பார்க்க 10 நிமிடம் ஒதுக்கப்பட்டது. சரியாக 9.15க்கு விடை எழுதத் தொடங்கினர். பத்தாம் வகுப்பு தேர்வு இன்று தொடங்குவதை அடுத்து 3369 தேர்வு மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. தனியார் பள்ளிகளில் அமைந்துள்ள தேர்வு மையங்களில் அந்த பள்ளியின் உரிமையாளர், முதல்வர் உள்ளிட்ட யாரும் பள்ளி வளாகத்துக்குள் வரக்கூடாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர தேர்வு மையங்களுக்கு வரும் மாணவர்கள் முறைகேடுகளில் ஈடுபட்டால் என்ன தண்டனை என்பது குறித்த விவரங்கள் அடங்கிய போஸ்டர்கள் தேர்வு மையங்களில் ஒட்டப்பட்டு இருந்தது.
துண்டுச் சீட்டு ைவத்திருத்தல், பார்த்து எழுத முயற்சித்தல், விடைத்தாள் மாற்றிக் கொள்வது, ஆள் மாறாட்டம் செய்வது உள்ளிட்டவை குற்றச் செயல்களாக கருதப்படும் என்பதால் அவற்றை செய்தால் 2 ஆண்டுகள் தேர்வு எழுத முடியாது என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது. இது தவிர விடைத்தாளில் அனைத்து பக்கங்களிலும் விடைகளை எழுதிவிட்டு அவற்றை மாணவர்களே திரும்ப அனைத்து பக்கங்களையும் குறுக்கு கோடிட்டு அடிக்கக் கூடாது என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளனர். புழல் சிறையில் 24 கைதிகளும், 6 விசாரணை கைதிகளும், வேலூர் சிறையில் 17 கைதிகளும், கடலூர் சிறையில் 11 கைதிகளும் இந்த தேர்வினை எழுதுகின்றனர். மொத்தம் 11 பெண்கள் உட்பட 58 கைதிகள் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதுகின்றனர்.