அரசியல் கட்சிகள் போட்டா போட்டி மேற்கு வங்க தெருக்களில் அனல் பறக்கும் பிரசாரம்
3/14/2016 3:03:53 PM
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் அரசியல் கட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு தெருக்களில் இறங்கி பிரசாரம் செய்து வருகின்றன. இதனால் அங்கு அரசியல் களத்தில் அனல் பறக்கிறது.மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 4 ம் தேதி தொடங்கி 6 கட்டங்களாக நடக்கிறது. ஆளும் திரிணாமுல் கட்சி வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு கள்ததில் எப்போதோ குதித்து விட்டது. அதன் தலைவரும், முதல்வருமான மம்தா பானர்ஜி கொல்கத்தாவின் தெருக்களில் நேரடி நடைபயண பிரசாரத்தை செய்து வருகிறார்.
பிரதான எதிர்கட்சியான இடதுசாரி முகாம்களில் இன்னும் வேட்பாளர் பட்டியல் முழுமையடையாத போதிலும் அவர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இம்முறை திரிணாமுலுக்கு எதிராக பாஜவும் களத்தில் வேகம் காட்டி வருகிறது. மொத்தமுள்ள 294 தொகுதிகளில் பாஜ 52 இடங்களுக்கு மட்டுமே முதல் கட்டமாக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. காங்கிரசும், இடதுசாரி முன்னணியும் தொகுதி பங்கீடு குறித்து பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றன. ஜோகா தொடங்கி பெகலா வரையிலான 7 கிமீ நடைபயண பிரசாரத்தை மம்தா மேற்கொண்டு வருகிறார். இவருக்கு ஆதரவாக வேட்பாளர்கள், அமைச்சர்கள், கொல்கத்தா மேயர் சோபன் சட்டர்ஜி, எம்எல்ஏக்கள் என ஒரு மிகப் பெரிய பட்டாளமே திரண்டு வந்துள்ளதால் கொல்கத்தா வீதிகள் பரபரப்புடன் காணப்பட்டன.டயமண்ட் ஹார்பர் சாலையில் நடைபயண பிரசாரம் செய்த திரிணாமுல் கட்சியினரை காண மக்கள் வாசல்களிலும், பால்கனியிலும், தெருக்களிலும் குவிந்ததால் நெரிசல் ஏற்பட்டது.
அதே போல் மற்றொரு பகுதியில் இடது முன்னணி சார்பில், சிபிஎம், சிபிஐ கட்சி வேட்பாளர்கள், தலைவர்கள் என மிகப் பெரிய அளவில் கட்சி தொண்டர்கள் பிரசாரத்தை தொடங்கினர். முன்னாள் முதல்வர் புத்ததேவ் சொந்த ஊரான ஜாதவ்பூரில் இருந்து இடதுசாரிகள் தங்களது பிரசாரத்தை தொடங்கினர்.இந்த தரப்பிலும் முக்கிய தலைவர்களான அஞ்சன் பேரா, முன்னாள் எம்பி சுஜன் சக்கரவர்த்தி உள்ளிட்ட ஏராளமானோர் அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்து வருகின்றனர். ஆளும் மற்றும் எதிர் தரப்பு பிரசாரங்களால் மேற்கு வங்க தெருக்களில் அனல் பறக்கிறது. தேர்தல் பிரசாரம் களை கட்டியுள்ளது.