பாரதிய ஜனதா பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டுகள் வீச்சு தி.பூண்டி அருகே நள்ளிரவு பரபரப்பு
3/14/2016 3:02:20 PM
திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி அருகே பாரதிய ஜனதா பிரமுகர் வீட்டில் நள்ளிரவில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார்.திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அடுத்த பாமணி புதுத்தெருவை சேர்ந்தவர் கணேசன்(42). இவரது மனைவி தேவி. இவர்களுக்கு ஒரு பெண், 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.கணேசன் திருவாரூர் மாவட்ட பாரதிய ஜனதா பொதுச் செயலாளராக பதவி வகித்து வருகிறார். இவருக்கு ஏற்கனவே பலமுறை கொலை மிரட்டல்கள் வந்துள்ளன. ஒருமுறை அவரை முகமூடி அணிந்த மர்ம நபர்கள் வழிமறித்து கொல்ல முயன்றனர். அவர்களிடம் இருந்து கணேசன் தப்பினார்.
பின்னர் அவரது வீட்டு வாசலுக்கு வந்து மர்்ம நபர்கள் மிரட்டல் விடுத்தனர். அதனை தொடர்ந்து 2 முறை கடிதம் மூலம் கணேசனுக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது. இது குறித்து கணேசன் கொடுத்த புகாரை தொடர்ந்து அவரது வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.நேற்று இரவு கணேசன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். வராண்டாவில் போலீஸ்காரர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தார். நள்ளிரவு மர்ம நபர்கள் வீட்டிற்குள் 2 பெட்ரோல் குண்டுகளை வீசினர்.பீர் பாட்டில் மற்றும் குவாட்டர் பாட்டில்களில் பெட்ரோலை அடைத்து திரியை வைத்து வீசி உள்ளனர். வராண்டாவில் பெட்்ரோல் குண்டுகள் விழுந்து வெடித்துள்ளன. அதிர்ஷ்டவசமாக கணேசன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எவ்வித சேதமும் ஏற்படவில்லை.
போலீஸ்காரர் சுதாரித்து எழுந்து பிடிக்க முயல்வதற்குள் மர்ம நபர்கள் தப்பி ஓடி விட்டனர். தகவலறிந்த திருவாரூர் எஸ்பி ஜெயச்சந்திரன், திருத்துறைப்பூண்டி டிஎஸ்பி கண்ணதாசன், இன்ஸ்பெக்டர் அமுதாராணி, எஸ்ஐ பாலசுப்பிரமணியன் ஆகியோர் இன்று அதிகாலை வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.கணேசன் கொடுத்த புகாரின்பேரில் வழக்கு பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். கணேசன் கூறுகையில், ஏற்கனவே எனக்கு இதுபோல் பலமுறை மிரட்டல்கள் வந்துள்ளன.இது தொடர்பாக போலீசில் புகார் செய்தும் உரிய நடவடிக்கை எடுக்காததால் இச்சம்பம் நடந்துள்ளது. எனவே எனக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றார்.