சட்டமன்ற தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் தொகுதி வாரியாக அதிமுக பட்டியல் தயாரிப்பு
3/14/2016 3:01:32 PM
திருச்சி: சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது தொடர்பாக தொகுதி வாரியாக அதிமுக நிர்வாகிகள் பட்டியல் தயாரித்து வருகின்றனர்.கடந்த 2014ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் அதிமுக 37 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ‘ஆளுங்கட்சியான அதிமுக தனது அதிகார பலத்தை பயன்படுத்தி வாக்காளர்களுக்கு தங்குதடையின்றி பணம் பட்டுவாடா செய்தது. இதை எதிர்கட்சிகள் தடுக்க முடியாதபடி 2 நாட்களுக்கு தேர்தல் கமிஷன் மூலம் தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு போடப்பட்டது’ என அனைத்து எதிர்கட்சிகளும் குற்றம் சாட்டின.
சட்டமன்ற தேர்தலிலும் அதே பார்முலாவில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க ஆளுங்கட்சி இப்போதே நடவடிக்கைகளை தொடங்கி விட்டது. ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள வாக்காளர் பட்டியலின் நகல்கள் அனைத்து ஒன்றிய, நகர பேரூர், கிளை, வார்டு நிர்வாகிகளுக்கும் அதிமுக சார்பில் வழங்கப்பட்டு உள்ளது.இந்த வாக்காளர்பட்டியலை வைத்துக்ெகாண்டு அந்தந்த பகுதி நிர்வாகிகள் ஒவ்வொரு வாக்காளரும் எந்த கட்சியை சேர்ந்தவர், நடுநிலையாளரா, பணம் கொடுத்தால் நமக்கு வாக்களிப்பாரா, இவர் பணம் வாங்க மாட்டார், அரசு ஊழியரா, என்பது போன்ற விவரங்களை சேகரிக்கும்படி மேலிட உத்தரவு வந்துஉள்ளது. அதன்படி அதிமுக நிர்வாகிகள் அந்தந்த பகுதிகளில் இந்த பட்டியல் தயாரிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
இந்த மாத இறுதிக்குள் இந்த பட்டியலை மேலிடத்துக்கு அனுப்ப வேண்டுமாம். அதற்கு ஏற்ப மேலிடத்தில் இருந்து பணம் பட்டுவாடா செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.டெல்டா மாவட்டங்களில் அதிமுக நிர்வாகிகள் இப்போது இந்த பணியில் தான் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கம்ப்யூட்டர் வசதி இல்லாதவர்கள் வெளியில் உள்ள கம்ப்யூட்டர் சென்டர்களுக்கு வந்து இந்த பணியை செய்கிறார்கள். வேறு ஆட்கள் ஜாப் ஒர்க் செய்ய கம்ப்யூட்டர் சென்டர் வந்தால் இப்போது முடியாது, 2 நாட்களுக்கு ஆர்டர் இருக்கிறது என கம்ப்யூட்டர் சென்டர் நிர்வாகிகளே மற்றவர்களே உள்ளே அனுப்பாமல் தடுத்து விடுகிறார்கள்.