சூப்பர் 10 சுற்றுக்கு முன்னேறியது வங்கதேசம் அடுத்த 4 போட்டிகள் மிக முக்கியமானது மோர்டசா உற்சாகம்
3/14/2016 2:54:25 PM
தர்மசாலா: உலக கோப்பை டி20 தகுதி சுற்றில் நேற்று இரவு நடந்த போட்டியில், ஓமன் அணியை வங்கதேசம் வீழ்த்தியது. இதன் மூலம் சூப்பர் 10 சுற்றுக்கு வங்கதேசம் முன்னேறியது. இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் அடங்கிய பிரிவில் வங்கதேசம் இடம்பிடித்தது. இது குறித்து வங்கதேச கேப்டன் மோர்டசா கூறுகையில், ‘‘தமீம் இக்பாலுக்கு நன்றி. கடைசி 3 போட்டிகளிலும் அவர் சிறப்பாக ஸ்கோர் செய்துள்ளார். மற்ற வீரர்கள் அவருடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள். தமீமின் பார்ம் தொடரும் என்று எனக்கு நம்பிக்கை உள்ளது.
அடுத்து எங்கள் முன் உள்ள மிகப்பெரிய 4 போட்டிகளில் கவனம் செலுத்துவோம். இதில், தவறு செய்ய மாட்டோம். நன்றாக விளையாட வேண்டும் என்றால், பயமில்லாத கிரிக்கெட்டை வெளிப்படுத்த வேண்டும்,’’ என்றார். 103 ரன் எடுத்து ஆட்டநாயகன் விருது வென்ற தமீம் இக்பால் கூறுகையில், ‘‘அடுத்த ஸ்டேஜ் மிக முக்கியமானது. அதிலும் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி முக்கியத்துவம் வாய்ந்தது. எனது பார்ம் தொடரும் என நம்புகிறேன்,’’ என்றார். ஓமன் கேப்டன் சுல்தான் அகமது கூறுகையில், ‘‘தமீமின் இன்னிங்ஸ் மாறுபட்டது. இந்த சம்மர் எங்களுக்கு சிறப்பானது. அதனால்தான் இந்த அளவுக்காவது முன்னேறி வந்துள்ளோம்,’’ என்றார்.