கிராமப்புறங்களில் ஜெ. படம் கண்டுகொள்ளாத தேர்தல் அதிகாரிகள்
3/14/2016 2:47:18 PM
திருவள்ளூர்: தமிழகத்தில் வரும் மே மாதம் 16ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. இதனால், கடந்த 4ம் தேதி முதல், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, அரசு அலுவலகங்களில் உள்ள முதல்வர் ஜெ., வின் படங்களை அழிக்கவும் அல்லது அதன் மேல் ஸ்டிக்கர் ஒட்டி மறைக்கவும் உத்தரவிடப்பட்டது. தொடர்ந்து, அரசு மற்றும் பொதுத்துறை நிறுவன சுவர்களில் இருக்கும் அரசியல் கட்சி விளம்பரங்களை அழிக்கவும், கட்சி கொடிகள் மற்றும் கம்பங்களை அகற்றவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
இதையடுத்து, வருவாய்த்துறை அதிகாரிகள் நகரப் பகுதிகளில் தேர்தல் விதிமுறைகளை மீறி எழுதப்பட்டுள்ள சுவர் விளம்பரங்களை அழிக்கும் பணியில் தீவிரம் காட்டியுள்ளனர். தமிழக அரசின் ஊரக வாழ்வாதார இயக்கம், அம்மா திட்டம் உட்பட பல்வேறு திட்டங்கள் குறித்து கிராமப் புறங்களில் உள்ள ஊராட்சி அலுவலகம் உள்ளிட்ட பொது இடங்களில் இரும்பு போர்டுகள் வைக்கப்பட்டுள்ளது.
இந்த விளம்பர போர்டுகளில் முதல்வர் ஜெ., படம் அச்சிடப்பட்டுள்ளது. ஆனால், கிராமங்களில் உள்ள போர்டுகளில் ஜெ., படங்களை தேர்தல் அலுவலர்கள் அழிக்காமலும், அதன் மேல் ஸ்டிக்கர் ஒட்டி மறைக்காமலும் உள்ளனர். இது மற்ற அரசியல் கட்சியினர் மத்தியில், பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், நகரப் பகுதிகளில் தீவிரம் காட்டும் மாவட்ட அதிகாரிகள், கிராமங்களிலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.