குறைந்தழுத்த மின்சாரத்தால் மக்கள் அவதி
3/14/2016 2:46:56 PM
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது கோனேரிக்குப்பம் ஊராட்சி. இந்த ஊராட்சியில் விரிவாக்க பகுதிகளாக அண்ணாநகர், பாலாஜிநகர், முருகன் நகர், பம்பா நகர், கணபதி நகர் உள்ளிட்ட 15 நகர்கள் உள்ளன. இங்கு, 800க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. குடியிருப்புகளுக்கு தேவையான மின்சாரம், காஞ்சிபுரத்தில் இருந்து 10 கி.மீ தொலைவில் உள்ள பரந்தூர் துணை மின் நிலையத்தில் இருந்து விநியோகிக்கப்பட்டு வருகிறது.
குடியிருப்புகளுக்கு சில ஆண்டுகளாக இருமுனை (2 பேஸ்) மின்சார இணைப்பே வழங்கப்பட்டு வருகிறது. எனினும் பெரும்பாலான வீட்டு உரிமையாளர்கள் மும்முனை இணைப்பு கேட்டு விண்ணப்பித்திருந்தனர். ஆனால் பல மாதங்களாகியும் இந்த குடியிருப்புகளில் மும்முனை மின்சார லைன் இணைப்பு வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. இருமுனை மின்சாரமும் குறைந்த அழுத்தத்தில் தான் வழங்கப்படுதாக தெரிகிறது. இதனால் கிரைண்டர், டி.வி, மிக்சி உள்ளிட்ட மின்சாதன பொருட்களை பயன்படுத்த முடியாமல் மக்கள் அவதிப்படுகின்றனர்.
கோனேரிக்குப்பம் ஊராட்சி விரிவாக்க பகுதிகளின் அருகே 1 கி.மீ. தூரத்தில் வையாவூர் துணை மின் நிலையம் இயங்கி வருகிறது. ஏற்கனவே இருந்த பரந்தூர் துணை மின்நிலையத்தின் இணைப்பை விட்டு, இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மேற்கண்ட நகரங்களுக்கு மின்சாரத்தை வழங்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர். இத்திட்டத்தை மின்வாரிய அதிகாரிகள் மேற்கொண்டால் தங்களது வீடுகளுக்கு மின்சாரம் தடையின்றி கிடைக்கும் என கோனேரிக்குப்பம் ஊராட்சியின் விரிவாக்கப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.