மணலி பேருந்து நிலையம் அருகே அம்மன் கோயில் உண்டியல் கொள்ளை
3/14/2016 2:45:50 PM
திருவொற்றியூர்: சென்னை மணலி பேருந்து நிலையம் அருகே உள்ள தில்லை மாரியம்மன் ஆலயத்தில் நேற்றிரவு பூஜை முடிந்ததும் பூசாரி முருகன், கோயிலை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார். இன்று அதிகாலை 5 மணியளவில் மீண்டும் பூசாரி முருகன், கோயிலை திறக்க வந்தார்.அப்போது கோயில் கருவறைக்கு முன்பிருந்த உண்டியல் உடைக்கப்பட்டு, அதில் பணமும் சில்லறைகளும் வெளியே சிதறி கிடந்ததைக் கண்டு பூசாரி முருகன் அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து ஆலய நிர்வாகத் தலைவர் தவமணிக்கு முருகன் தகவல் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து மணலி காவல் நிலையத்தில் தவமணி புகார் கொடுத்தார். உண்டியலில் சுமார் ரூ. 20 ஆயிரம் காணிக்கை பணம் இருந்ததாகக் கூறப்படுகிறது.இப்புகாரின்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். அப்போது கோயிலின் பின்பக்க சுவர் வழியாக மர்ம ஆசாமிகள் ஏறி குதித்து கொள்ளையடித்து சென்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. கோயிலுக்குள் இருந்த சிசிடிவி காமிராவிலும் கொள்ளையடித்த ஆசாமிகளின் உருவங்கள் பதிவாகி இருக்கின்றன. அவர்கள் அனேகமாக வடஇந்திய ஆசாமிகளாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிசிடிவி காமிராவில் பதிவான மர்ம ஆசாமிகளைத் தேடி வருகின்றனர்.மணலி பகுதியில் சமீபகாலமாக இரவு நேரங்களில் வீடு புகுந்து கொள்ளை, வழிப்பறி மற்றும் செயின் பறிப்பு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மேலும், அப்பகுதியில் உள்ள பல்வேறு கோயில் உண்டியல்களை மர்ம ஆசாமிகள் கொள்ளையடிக்கும் சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன. இதுகுறித்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காமலும், தீவிர ரோந்து பணிகளிலும் ஈடுபடாமலும் மெத்தனமாகஇருக்கின்றனர் என்று அப்பகுதி மக்கள் வேதனையுடன் கூறுகின்றனர்.