அம்பத்தூர் அருகே ரயில் மோதி பெண் ஊழியர் பலி : கணவன் கண்ணெதிரே சோகம்
3/14/2016 2:45:29 PM
ஆவடி: அம்பத்தூர் அருகே தண்டவாள பராமரிப்பு பணியில் ஒரு பெண் ஊழியர் ஈடுபட்டு கொண்டிருந்தபோது, அவ்வழியாக வந்த மின்சார ரயில் மோதியதில் பலியானார்.அரக்கோணம் அருகே காட்டுபாக்கம், பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் பகவான் (53). இவரது மனைவி புஷ்பா (45). இவர்கள் இருவரும் ரயில்வே ஒப்பந்த ஊழியர்கள்.கொரட்டூர்-வில்லிவாக்கம் ரயில் நிலையங்களுக்கு இடையே இவர்கள் இருவரும் நேற்று மாலை தண்டவாள பராமரிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, திருவள்ளூரில் இருந்து சென்னைக்கு வந்த மின்சார ரயில் புஷ்பா மீது வேகமாக மோதியது. இதில் கணவன் கண்ணெதிரே புஷ்பா உடல் நசுங்கி பரிதாபமாக பலியானார். இதைப் பார்த்து பகவான் கதறி அழுதார்.பெரம்பூர் ரயில்வே போலீஸ் எஸ்ஐ ஆதி தலைமையில் வந்த போலீசார், புஷ்பாவின் சடலத்தை, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.