பொன்னேரி நெடுஞ்சாலையில் டேங்கர் லாரிகளால் போக்குவரத்து நெரிசல் பொதுமக்கள் அவதி
3/14/2016 2:43:11 PM
திருவொற்றியூர்: மணலி அருகே பொன்னேரி நெடுஞ்சாலை முழுவதும் ஏராளமான டேங்கர் லாரிகளை நிறுத்துவதால், அப்பகுதியில் மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் மாணவ மாணவிகள் உட்பட அனைத்து பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.மணலியில் இருந்து பொன்னேரி நெடுஞ்சாலை வழியாக மாதவரம், திருவொற்றியூர், மீஞ்சூர் போன்ற பகுதிகளுக்கு மாநகர பேருந்துகள், பள்ளி வாகனங்கள் என நாள்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்நிலையில், பொன்னேரி நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள சிபிசிஎல் தொழிற்சாலையில் தார் ஏற்றிச் செல்வதற்காக ஏராளமான டேங்கர் லாரிகள் வருகின்றன. இந்த வாகனங்கள் அனைத்தும் தொழிற்சாலைக்குள் செல்லாமல், நெடுஞ்சாலையோரம் நீண்ட நேரம் வரிசையாக நிற்கின்றன.இவற்றில் ஒருசில டேங்கர் லாரிகளை போக்குவரத்துக்கு இடையூறாக சாலையின் குறுக்கும் நெடுக்குமாக நிறுத்திவிடுகின்றனர். இதனால் அப்பகுதியில் மற்ற வாகனங்களும் செல்லும்போது, மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
இதனால் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், ஆம்புலன்சில் ஏற்றி வரப்படும் நோயாளிகள், தொழிலாளர்கள் உட்பட அனைத்து தரப்பு மக்களும் வாகன நெரிசலில் சிக்கி அவதிப்படுகின்றனர். இதனால் சில உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன.எனவே, பொன்னேரி நெடுஞ்சாலையில் டேங்கர் லாரிகளை போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் நிறுத்த வேண்டும் என்று சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் அதிகாரிகளுக்கும், போக்குவரத்து போலீசாருக்கும் பொதுமக்கள் பலமுறை புகார் கொடுத்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.பொன்னேரி நெடுஞ்சாலையில் இனிமேலாவது டேங்கர் லாரிகளை ஓரமாக நிறுத்த சம்பந்தப்பட்ட நிறுவனமும் போக்குவரத்து உயர் அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.