கடன் தொல்லையால் மனைவி, குழந்தைகளுடன் தற்கொலை முயற்சி
3/12/2025 5:01:25 PM
ஆவடி: சென்னை அம்பத்தூர், சபரி அய்யப்பன் நகர், வள்ளலார் தெருவை சேர்ந்தவர் செந்தில்வேல் (37). பேரீச்சம்பழ வியாபாரி. இவரது மனைவி லட்சுமிதேவி (31). இவர்களுக்கு முத்துவேல் (12) என்ற மகனும், நித்யலட்சுமி (9) என்ற மகளும் உள்ளனர். இவர்கள் முறையே 6-ம் வகுப்பு மற்றும் 4-ம் வகுப்பு படித்து வருகின்றனர்.தனது வியாபாரத்தை அபிவிருத்தி செய்வதற்காக செந்தில்வேல் பலரிடம் கடன் வாங்கியுள்ளார். வியாபாரம் சரிவர இல்லாததால், அவரது தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் செந்தில்வேலுக்கு ரூ. 5 லட்சம் வரை கடன் ஏற்பட்டது.
அவருக்கு கடன் கொடுத்தவர்கள் பணத்தைத் திருப்பிக் கேட்டுள்ளனர். அவர்களுக்கு பணம் கொடுக்க முடியாமல் செந்தில்வேல் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் தனது குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள செந்தில்வேல் முடிவு செய்துள்ளார்.இந்நிலையில், நேற்றிரவு செந்தில்வேல் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் அரளி விதையை அரைத்து குடித்துள்ளார். இதனால் 4 பேருக்கும் வாந்தி ஏற்பட்டது. இதைப் பார்த்ததும் அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து மீட்டு, அம்பத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.அங்கு 4 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அம்பத்தூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.