திருவள்ளூர் அருகே பரபரப்பு சிறுவனை கட்டிப்போட்டு 30 பவுன் நகை கொள்ளை : பைக் ஆசாமிகளுக்கு வலைவீச்சு
3/12/2025 4:59:16 PM
திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே வீட்டில் தனியாக இருந்த சிறுவனின் கை, கால்களை கட்டிப்போட்டு 30 பவுன் நகை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடுகின்றனர்.திருவள்ளூர் அடுத்த தொடுகாடு கிராமத்தை சேர்ந்தவர் சுகுமார் (42). தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி வனிதா (36). இவர்களது மகன்கள் மாறன் (15), மதன் (12). நேற்றுகாலை சுகுமாரன் வேலைக்கு சென்றுவிட்டார். மாலையில், வனிதாவும், மாறனும் ஸ்ரீபெரும்புதூருக்கு சென்றனர். சிறுவன் மதன், வீட்டில் தனியாக இருந்தான். இரவு 7 மணி அளவில் வீட்டுக்கு 2 பேர் வந்தனர். அவர்கள் மதனிடம் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளனர்.
இதையடுத்து மதன் தண்ணீர் எடுக்க வீட்டுக்குள் சென்றான். அவனை பின்தொடர்ந்த மர்ம நபர்கள், சிறுவனை ஒரு அறையில் கட்டிப்போட்டனர். மற்றொரு அறையில் இருந்த பீரோவை திறந்து, அதிலிருந்த 30 பவுன் நகைகள், அரை கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் எல்இடி டிவி ஆகியவற்றை கொள்ளையடித்து பைக்கில் சென்று விட்டனர்.இதனிடையே இரவு 8 மணிக்கு வீடு திரும்பிய வனிதா, மகன் கட்டப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். கை, கால்களின் கட்டுகளை அவிழ்த்துவிட்டனர். பதற்றத்துடன் இருந்த சிறுவனை பெற்றோர்கள் தேற்றினர்.
இதுகுறித்து மப்பேடு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு எஸ்பி சாம்சன், கூடுதல் எஸ்பி ஸ்டாலின், டிஎஸ்பி, விஜயகுமார் மற்றும் போலீசார் விரைந்தனர். மோப்ப நாய் ரூபி வரவைக்கப்பட்டது. அது சிறிது தூரம் ஓடி நின்றுவிட்டது. கைரேகை நிபுணர்களும் வந்து தடயங்களை சேகரித்தனர்.இதுபற்றி மப்பேடு போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.சிறுவனை கட்டிப்போட்டு கொள்ளையடித்த சம்பவம் திருவள்ளூரில் பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.