சட்டீஸ்கரில் துப்பாக்கி சண்டையில் 2 பாதுகாப்பு படை வீரர்கள் பலி
3/12/2025 4:46:05 PM
ராய்ப்பூர்: சட்டீஸ்கரில் முதல்வர் ராமன் சிங் தலைமையிலான பாஜ ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்குள்ள பல்வேறு பகுதிகளில் மாவோயிஸ்ட் பாதிப்பு அதிகம் உள்ளது. இவற்றை சமாளிக்க முடியாமல் ராமன் சிங் அரசு திணறி வருகிறது. மாவோயிஸ்ட்களை ஒடுக்க மத்திய, மாநில அரசுகள் இணைந்து தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றன. இந்த சூழலில் சோட்டேபெத்தியா-பாகன்ஷோர் பகுதியில் மாவோயிஸ்ட்கள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்து. இதை தொடர்ந்து இன்று அதிகாலை எல்லை பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாவோயிஸ்ட்கள் பதுங்கியிருக்கும் இடத்தை சுற்றி வளைத்தனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், இரு தரப்புக்கும் இடையே இன்று அதிகாலை 2.30 மணி அளவில் கடுமையான துப்பாக்கி சண்டை நடைபெற்றது. அடர்ந்த வனப்பகுதியில் பாந்தே காவல் நிலையத்திற்கு உள்பட்ட பகுதியில் இந்த மோதல் நடந்துள்ளது. இதில் மாவோயிஸ்ட்கள் தாக்குதலில் 2 எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் 4 பேர் படுகாயமடைந்தனர் என டிஎஸ்பி ஜெயந்த் வைஷ்ணவ் தெரிவித்தார்.
மாவோயிஸ்ட் தேடுதல் வேட்டையில் எல்லை பாதுகாப்பு படை வீரர்களும், மாவட்ட போலீசாரும் இணைந்து நடவடிக்கை மேற்கொண்டனர். இந்த தாக்குதலில் காயமடைந்தவர்கள் உடனடியாக ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டு ராய்ப்பூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். தாக்குதலில் உயிரிழந்த வீரர்கள் விஜய் குமார் மற்றும் ராகேஷ் நேரா என தெரியவந்துள்ளது.ஏற்கனவே இந்த பகுதியில் போலீசாரின் போலி என்கவுண்டர்களை கண்டித்து மாவோயிஸ்ட்கள் ஒரு நாள் அடைப்பு போராட்டத்திற்கும் அழைப்பு விடுத்துள்ளனர். போலீசாரிடம் சரண் அடைந்த பழங்குடியினரை தீவிரவாதிகள் என்று கூறி போலி என்கவுண்டரில் போலீசார் சுட்டு கொன்று விட்டதை கண்டிப்பதாக அப்பகுதியில் மாவோயிஸ்ட்கள் பரபரப்பு போஸ்டர்களையும் ஒட்டியிருந்தனர்.இந்த சம்பவத்தால் சட்டீஸ்கரில் பதற்றம் நிலவி வருகிறது.