வேண்டுதல் நிறைவேற மகாமக குளத்தில் வினோத வழிபாடு
3/12/2025 4:40:04 PM
கும்பகோணம்: 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கும்பகோணம் மகாமகம் விழா கடந்த பிப்ரவரி மாதம் 13 முதல் 22ம்தேதி வரை நடைபெற்று முடிந்தது. மகாமகம் நடந்த 10 நாட்களிலும் 45 லட்சம் பக்தர்கள் புனித நீராடியதாக அரசு அறிவித்தது.மாசி முழுவதும் மகாமகம் குளத்தில் நீராடினால் பாவங்கள் தீரும் என கூறப்படுவதால் தொடர்ந்து வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராட நாள்தோறும் கும்பகோணம் வந்த வண்ணம் உள்ளனர். அந்த வகையில் இதுவரை 60 லட்சம் பேர் புனித நீராடியுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.
நேற்று வெள்ளிக்கிழமை மகாமக குளத்தில் ஏராளமானோர் புனித நீராடினர். அப்போது சிலர் குளத்தில் உள்ள மணலைக் கொண்டு கோயில்கள், வீடுகள் போல உருவம் செய்தனர். இதைப் பார்த்த மற்ற பக்தர்கள் தாங்களும் அதுபோல குளத்தின் ஒரு புறம் மணல்களை குவித்து பல்வேறு வடிவங்களை செய்து வினோத வழிபாடு நடத்தினர்.
இதைப் பார்த்த உள்ளூர் பக்தர்கள் குடும்பத்துடன் மகாமக குளம் வந்தனர். அவர்களும் மணலை குவித்து தங்களது வேண்டுதல்களை வடிவங்களாக செய்தனர்.
திருவடிக்குடில் சுவாமிகள் கூறுகையில், ‘இதுபோல் வினோத வழிபாடு எதுவும் வழக்கத்தில் கிடையாது. கோவை மற்றும் அப்பகுதியில் உள்ள மக்கள் தங்களுக்கு சொந்தமான வீடுகள் மற்றும் நிறுவனங்களை அமைப்பதற்காக கற்களை ஒன்றின் மேல் ஒன்று அடுக்குவர். புனித குளமான மகாமககுளத்தில் இது போல் வினோதமாக செய்வது வேடிக்கையாக உள்ளது என்றார்.
மணலை குவித்து வழிபாடு செய்த பெண் ஒருவரிடம் கேட்டபோது,‘ராமர், ராமேஸ்வரத்தில் மணலை குவித்து சிவலிங்கம் செய்து வழிபாடு செய்து தனது பாவங்களை போக்கினார். அதேபோல் இந்த மகாமககுளத்தில் புனித நீராடினால் அனைத்து பாவங்களும் போய்விடும். அதுவும் சிவலிங்கங்கள் போல் மணலில் செய்து வழிபாடு செய்தால் எங்களிடம் உள்ள மீதமுள்ள பாவங்களும் சென்று விடும்.
சொந்தமாக வீடுகட்டுவது என்றாலும், நிறுவனங்கள் அமைப்பது என்றாலும், வேண்டுதல்களையும், தங்கள் கோரிக்கைகளை உருவங்கள் போல் செய்து வழிபாடு செய்தால் நிறைவேறிவிடும் என்பதால் நாங்கள் இந்த புனித குளமான மகாமககுளத்தில் மணலை குவித்து, எங்களது குறைகளை மணலில் செய்து வழிபாடு செய்கிறோம்’ என்றார்.மகாமக குளத்தில் நடந்த இந்த வினோத வழிபாட்டினை அப்பகுதியை சேர்ந்த ஏராளமானோர் கண்டுகளித்தனர்.