சென்னை சேப்பாக்கம் லாக் நகர், கோட்டூர்புரத்தில் அரைகுறையாக திறக்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் தண்ணீர், மின்சாரம் இல்லாமல் மக்கள் அவதி
3/10/2025 2:44:50 PM
சென்னையில் சேப்பாக்கம், கோட்டூர்புரம், காஞ்சிபுரத்தில் நாவலூர், கோவையில் மலைநகர், சூலூர், ஈரோட்டில் சூரியம்பாளைம் ஆகிய இடங்களில் ரூ. 272.68 கோடி மதிப்பீட்டில் 4,044 அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளை தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை மூலம் தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் கட்டி முடித்தது.இந்த அடுக்குமாடி குடியிருப்புகளை கடந்த 1-ம் தேதி சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதா காணொலி காட்சி மூலம் திறந்து வைத்து, அக்குடியிருப்புகளின் சாவிகளை பயனாளிகளுக்கு அளித்தார்.இதில் என்ன விசேஷம் என்று கேட்கிறீர்களா? விஷயம் இருக்கிறது.
தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தினால் கட்டப்பட்ட 4,044 அடுக்குமாடி குடியிருப்புகளும் வெளியே பார்ப்பதற்கு பளிச்சென தெரிந்தாலும், உள்ளே எந்த அடிப்படை வசதிகளும் முற்றுப்பெறவில்லை.சென்னை சேப்பாக்கம் லாக் நகர், கோட்டூர்புரத்தில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளில் இன்னும் குடிநீர் குழாய்கள் பதித்தல் மற்றும் இணைப்பு, மின் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகள் முடிக்கப்படாமல் உள்ளது. தற்போது அங்கு மின்சாரம் மற்றும் குடிநீர் இணைப்பு பணிகள் மிக மந்தகதியிலேயே நடைபெற்று வருகின்றன.அதற்குள், இந்த அடுக்குமாடி குடியிருப்பில் ஒதுக்கீடு பெற்றவர்களை, அவர்கள் வசித்த இடத்தில் இருந்து மாநகராட்சி மற்றும் அரசு அதிகாரிகள் விரட்டி விட்டனர். இதனால் அவர்களும் இங்கு வந்து பார்த்தபோது, பெரும்பாலான வீடுகளில் குடிநீர் மற்றும் மின் இணைப்புகள் வழங்கப்படாமல் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்தனர்.
மேலும், சேப்பாக்கம் பகுதியில் உள்ள அயோத்திக்குப்பத்தில் குடிசை வீடுகளில் வசிக்கும் மீனவர் குடும்பங்களை வெளியேற்ற, அங்கே நீண்ட காலமாக வசிக்கும் அனைத்து மீனவ குடும்பங்களுக்கும் புதிதாக கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் வழங்கப்படும் என்று ஏற்கெனவே தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரிய அதிகாரிகள் உறுதி கூறியிருந்தனர்.ஆனால், புதிதாக அடுக்குமாடி குடியிருப்பு தயாரானதும், அயோத்திக்குப்பத்தில் வசித்த முக்கால்வாசி மீனவர் குடும்பங்களுக்கு மட்டும் வீடுகளை வழங்கிவிட்டு, மீதியுள்ள வீடுகளை தங்களது உறவுகளுக்கும் ‘வெயிட்’டாக கவனித்தவர்களுக்கும் அதிகாரிகளும் ஆளுங்கட்சி நிர்வாகிகளும் ஒதுக்கிக் கொண்டனர் என்று கூறப்படுகிறது.
இதனால் அயோத்திக்குப்பத்தை சேர்ந்த மீனவ குடும்பங்கள் அனைத்தும், புதிதாக கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளில் அத்துமீறி புகுந்து ஆக்கிரமித்து வருவதாக கூறப்படுகிறது.எனினும், அந்த வீடுகளுக்குள் இன்னும் பெயின்ட் அடிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும், அக்குடியிருப்புகளில் மின் இணைப்பு கொடுக்கப்படாமல் மின்வயர்கள் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கின்றன. குடிநீர் குழாய் இணைப்புகளும் இதுவரை கொடுக்கப்படாததால், அவர்கள் அனைவரும் செய்வதறியாது திகைத்து வருகின்றனர்.
இதேபோல், கோட்டூர்புரத்தில் புதிதாக கட்டப்பட்டு முதல்வரால் திறக்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பிலும் இன்னும் குடிநீர் மற்றும் மின் இணைப்புகள் வழங்கப்படவில்லை. தற்போது அப்பணிகள் அனைத்தும் மிக மந்தகதியில் நடைபெற்று வருகிறது. இதனால் அங்கு ஒதுக்கீடு பெற்றவர்கள், புதிய வீடுகளுக்குள் குடிபுக முடியாமலும், பழைய இடத்துக்கும் செல்ல முடியாமலும் தவியாய் தவித்து வருகின்றனர். இங்கும் ஏராளமான முறைகேடுகள் நடைபெற்று வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
‘நாங்க எல்லாம் சைதாப்பேட்டை ஆத்து பக்கம் கடந்த 20 வருஷமா வாடகை குடிசையில குடியிருந்தோம். கடந்த மழையில செம்பரம்பாக்கம் ஏரியில இருந்து தண்ணி திறந்துவிட்டப்ப, எங்க குடிசை ஆத்துல போயிடுச்சு. இவ்ளோ நாளா நாங்க நடுத்தெருவுல நின்னோம். எங்களுக்கு வீடு ஒதுக்கியிருக்கு, நீங்க அங்க போங்கனு கோட்டூர்புரத்துக்கு அதிகாரிங்க விரட்டிவிட்டாங்க. இங்க வந்து பார்த்தா, பெரும்பாலான வீடுகள்ல கதவுகளே இல்லை. மின் இணைப்பும் கொடுக்கல. தண்ணியும் இல்ல. இப்ப நாங்க என்ன செய்யறதுன்னும் தெரியலை. பிள்ளை குட்டிகளோடு மீண்டும் நடுத்தெருவுல தவித்து வருகிறோம்.
எங்கள்ல சிலரது பெயர்களைப் பயன்படுத்தி ஆளுங்கட்சியினர் வீடுகளை பெற்றுள்ளனர்’ என்று ஏராளமான ஏழை பெண்கள் கண்ணீர் வடித்தபடி கூறுகின்றனர்.இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சிலரிடம் கேட்டதற்கு, ‘நாங்க எப்பவும் கட்டிடப் பணிகளை முடித்துவிட்டு, அதன்பிறகுதான் வீட்டுக்குள் குடிநீர் மற்றும் மின் இணைப்புகளையும் வர்ணம் பூசும் வேலைகளையும் மேற்கொள்வோம். இப்பணிகளை முடிப்பதற்கே ஆளுங்கட்சி குறுக்கீடுகள் மற்றும் தாமத நிதி ஒதுக்கீடு ஆகியவற்றால் நாலரை வருடம் ஓடிவிட்டது.இந்நிலையில், கடந்த மாத மத்தியில், தேர்தல் தேதியை சீக்கிரம் அறிவிச்சுடுவாங்க. அதனால் கட்டிட பணிகள் அரைகுறையா இருந்தாலும், வெளியே மட்டும் பெயின்ட் அடிச்சு, வர்ற 1-ம் தேதி முதல்வர் திறக்கற மாதிரி ஏற்பாடு பண்ணிக்குங்கனு மேலதிகாரிங்க பிரஷர் கொடுத்தாங்க. அதான் இப்படி ஆயிடுச்சு’ என்று அதிகாரிகள் கூலாக கூறுகின்றனர்.
ஏற்கெனவே மழை வெள்ளத்தினால் வீடுகளை இழந்து நடுத்தெருவில் நின்றிருந்த ஏழை மக்களை, தேர்தல் தேதி அறிவிப்பை காரணம் காட்டி, அரைகுறையாக கட்டி முடிக்கப்பட்ட அரசு வீடுகளுக்கு அதிகாரிகள் துரத்தி விடுகின்றனர். ஆனால், அங்கு குடிக்க ஒரு வாய் தண்ணீரோ, மின்வசதியோ இல்லாமல் குழந்தைகளுடன் ஏழை மக்கள் எப்படி இருக்க முடியும்?தமிழகத்தில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலுக்கான தேதி கடந்த 4-ம் தேதி மாலை 3 மணியளவில் அறிவிக்கப்படும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்தது.
இதைத் தொடர்ந்து, கடந்த 1-ம் தேதி முதல் 3-ம் தேதிவரை இப்படி அரைகுறையாக கட்டப்பட்டுள்ள அரசு கட்டிடங்களையும் குடியிருப்புகளையும் சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதாவை அமைச்சர்களும் உயர் அதிகாரிகளும் காணொலி காட்சி மூலம் திறக்க வைத்துள்ளனர் என்று கூறப்படுகிறது.‘இந்த கட்டிடப் பணிகள் முழுமையாக முடிக்கப்படாத நிலையில், ஒருவேளை மக்கள் குடியேறி அசம்பாவித சம்பவங்கள் நடந்து உயிரிழப்பு ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் அமைச்சர்களும் பொறுப்பேற்பார்களா?’ என்று பாதிக்கப்பட்ட மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதற்கு வரும் சட்டமன்றத் தேர்தலில் மக்களால் நல்ல முடிவு கிடைக்கும்.