உடல் எடையை குறைக்கும் கொள்ளு
3/9/2025 2:51:58 PM
பெண்களுக்கு உடல் எடையை கூட்டுவது, குறைப்பதற்கான உணவு குறித்து நாம் பார்ப்போம். தைராய்டு சுரப்பி சரியான முறையில் வேலை செய்யாததால் எடை கூடும். சரியான வகையில் உடல் உழைப்பு தேவை. வீட்டு வேலைக்கு இயந்திரங்களை பயன்படுத்துவது, உணவு முறையில் ஏற்படும் மாற்றம் போன்றவற்றால் உடல் எடை அதிகமாகிறது. எனவே, நேரத்துக்கு உணவு சாப்பிட வேண்டும். எண்ணெய் உணவுகளை தவிர்க்க வேண்டும். கொள்ளுவை பயன்படுத்தி உடல் எடையை குறைப்பதற்கான மருந்து தயாரிக்கலாம். கொள்ளுவை வறுத்து பொடி செய்து கொள்ளவும். இதில் ஒரு ஸ்பூன் எடுத்து ஊறவைத்த கொடம்புளி தண்ணீர் சேர்க்கவும். ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி காலையில் வெறும் வயிற்றில் தினமும் 100 மில்லி அளவுக்கு குடித்துவர உடல் எடைகுறையும். இதை குடித்தால் சிலருக்கு அசிடிட்டி வரலாம். இதை தவிர்க்க மோர் குடிக்கலாம். கொள்ளு உடலுக்கு உஷ்ணத்தை கொடுக்கும்.
கல்யாண முருங்கை இலையை பயன்படுத்தி உடல் எடையை குறைக்கும் தேனீர் தயாரிக்கலாம். 4 கல்யாண முருங்கை இலைகளை துண்டுகளாக்கி கொள்ளவும். இதனுடன் 10 மிளகு தட்டி போடவும். ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி வெறும் வயிற்றில் தினமும் 100 மில்லி குடித்துவர உடல் எடை குறையும். காலையில் வெறும் வயிற்றில், 2 கல்யாண முருங்கை இலைகளுடன், 5 மிளகு சேர்த்து வெற்றிலை போன்று மடித்து இலையின் சாற்றை சாப்பிட்டு விட்டு சக்கையை துப்பிவிட வேண்டும். இது உடல் எடையை குறைக்கும். கல்யாண முருங்கையின் தண்டுகள் அடர்த்தியான முட்களை உடையது. சிவந்த பூக்களை கொண்டது. பூவரச இலைகள் போன்று இருக்கும். அழகுக்காக வளர்க்க கூடியது.
இந்த இலைகள் மூட்டுவலியை குறைக்க கூடியது. உஷ்ணமான தன்மை உடையது என்பதால் சளியை போக்க கூடியது. தேனீராக்கி குடிப்பதன் மூலம் தேவையற்ற கொழுப்பை கரைக்கும். இதை அடிக்கடி எடுத்து கொள்வதால் உடல் எடை குறையும்.உடல் எடையை அதிகரிக்கும் கஞ்சி தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: உளுந்தம் பருப்பு, ஏலக்காய், முந்திரி, பிஸ்தா, பாதாம், பால், நாட்டு சக்கரை, நெய்.
உளுந்தம் பருப்பை லேசாக வறுத்து ஏலக்காய் சேர்த்து பொடி செய்து வைத்துக்கொள்ளவும். இதேபோல், முந்திரி, பிஸ்தா, பாதாம் ஆகியவற்றை பொடி செய்துகொள்ளவும். இவைகளில் இருந்து தலா ஒரு ஸ்பூன் பொடி எடுத்து தண்ணீர் ஊற்றி கலக்கி எடுத்து வைத்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீர் எடுத்து, அதில் நாட்டு சர்க்கரையை போட்டு கொதிக்க வைக்கவும். இதில் அரை ஸ்பூன் நெய் சேர்க்கவும். இதை நன்றாக காய்ச்சியவுடன் ஏற்கனவே கலந்து வைத்திருந்த கலவையை சேர்க்கவும். இது நன்றாக வெந்தவுடன் காய்ச்சிய பால் சேர்க்கவும். காலையில் உணவு சாப்பிட்ட பின் இந்த கஞ்சியை குடித்துவர உடல் எடை கூடும். உடல் மெலிந்தவர்கள் காலையில் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் குடித்தால் உடல் எடை அதிகரிக்கும்.நன்றி: சன் டி.வி.