தேசிய ஊரக வேலை திட்டத்தில் கூலி வழங்குவது கண்காணிக்கப்படுமா?தேர்தல் கமிஷனுக்கு கட்சியினர் கோரிக்கை
3/5/2025 1:30:25 PM
திருவள்ளூர்: தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணிகளில் சம்பளம் வழங்குவதையும், மகளிர் சுயஉதவி குழுக்களையும், பறக்கும் படைகள் மூலம் தேர்தல் கமிஷன் கண்காணிக்க வேண்டும் என பல்வேறு கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.தேர்தலில் பண பலம், ஆள் பலத்தை கட்டுப்படுத்த தேர்தல் கமிஷன் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. தொகுதியில் பறக்கும் படை, போலீஸ் நிலையம் அளவில் நிலையான கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு, தனித்தனி வாகன வசதி செய்யப்பட்டுள்ளது. வாக்காளர்களுக்கு பணம், பொருள் கொடுப்பதை குழுவினர் தடை செய்வார்கள்.
இந்நிலையில், மத்திய அரசின் திட்டமான தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்திற்கு தமிழகத்தில் தடை விதிக்கப்படவில்லை. இத்திட்டத்தில் பணி செய்வோருக்கு, தற்போது அதிகபட்சமாக ரூ.163 கூலி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தை வைத்து, இதில் பணி செய்யும் தொழிலாளருக்கு முறைகேடாக பணம் பட்டுவாடா செய்யப்படலாம். இதை கருத்தில் கொண்டு நிர்ணயிக்கப்பட்ட கூலியை விட அதிகமாக கொடுக்கப்படுகிறதா என்பதையும், மகளிர் சுய உதவி குழுக்கள் அதிகம் இருப்பதால், குழுவில் உள்ள பெண்கள் மூலம் பணம் வழங்கப்படுகிறதா என்பதையும் பறக்கும் படையினர் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல் கமிஷனுக்கு பல்வேறு கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.