அம்பத்தூர் அருகே மகன் தாக்கியதில் தந்தை பலி: குடிபோதையால் விபரீதம்
3/5/2025 1:29:50 PM
ஆவடி, சென்னை அம்பத்தூரை அடுத்த மங்களபுரம், குள்ளன் தெருவை சேர்ந்தவர் ஸ்ரீதர் (50). இவரது மனைவி முத்தமிழ்செல்வி (45). இவர்களுக்கு பிரதீப்ராஜ் (20) என்ற மகனும். சவுமியா (17) என்ற மகளும் உள்ளனர். அப்பகுதியில் உள்ள ஒலிபெருக்கி நிலையம் ஒன்றில் பிரதீப்ராஜ் வேலை செய்து வருகிறார். சவுமியா பிளஸ் 2 படித்து வருகிறார். ஸ்ரீதர் வேலைக்கு செல்லாமல் நாள்தோறும் வீட்டுக்கு குடித்துவிட்டு வந்து, மனைவி மற்றும் மகளுடன் வாய் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.இந்நிலையில், நேற்றிரவு ஸ்ரீதர் அளவுக்கு அதிகமான குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். பின்னர் பிரதீப்ராஜும் வேலை முடித்து இரவு 10.30 மணியளவில் வீட்டுக்கு வந்து சாப்பிட்டு கொண்டிருந்தார்.
அப்போது குடிபோதையில் ஸ்ரீதர், அவர் மீது துப்பியுள்ளார். மேலும் அரைகுறை ஆடைகளுடன் ஸ்ரீதர் தள்ளாடி கொண்டிருந்தார். இதைப் பார்த்ததும் ‘ஏன் இப்படி அலங்கோலமாக திரியுறீங்க?’ என்று தந்தையை பிரதீப்ராஜ் கண்டித்துள்ளார். இதனால் தந்தைக்கும் மகனுக்கும் இடையே சுமார் ஒரு மணி நேரம் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பிரதீப்ராஜ், அங்கிருந்த உருட்டுக்கட்டையால் ஸ்ரீதரின் தலையில் பலமாக அடித்துள்ளார்.
இதில் ஸ்ரீதர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இதுகுறித்து தகவலறிந்ததும் அம்பத்தூர் தொழிற்பேட்டை இன்ஸ்பெக்டர் கர்ணன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.பின்னர் ஸ்ரீதரின் சடலத்தை போலீசார் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இப்புகாரின்பேரில் போலீசார் நள்ளிரவில் பிரதீப்ராஜை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.