அங்கன்வாடி மைய கல்வெட்டில் பேரூராட்சி தலைவர் பெயர் புறக்கணிப்பு
3/5/2025 1:27:02 PM
புழல்,: செங்குன்றம் பேரூராட்சி 12-வது வார்டு மக்கள் முன்னேற்ற மன்றம் தெருவில், மாதவரம் தொகுதி நிதியில் இருந்து 2014-15-ம் ஆண்டுக்கான நிதியில் ரூ 5.75 லட்சம் மதிப்பீட்டில் குழந்தைகள் அங்கன்வாடி மையம் கட்டி முடிக்கப்பட்டது.இந்நிலையில், நேற்று மாலை தேர்தல் தேதி அறிவிக்கப்படும் நிலையில், நேற்று காலை தொகுதி எம்எல்ஏ மாதவரம் மூர்த்தி இந்த அங்கன்வாடி மையத்தை அவசர அவசரமாகத் திறந்து வைத்தார்.
அவர் திறந்து வைத்த கல்வெட்டில் பேரூராட்சி தலைவரான திமுகவை சேர்ந்த ராஜேந்திரன், துணை தலைவர் விப்ரா நாராயணன் மற்றும் திமுக. தேமுதிக மற்றும் காங்கிரஸ் கவுன்சிலர்களின் பெயர்கள் பொறிக்கப்படவில்லை.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி, பேரூராட்சி உதவி இயக்குநர் இந்திரா ஆகியோருக்கு சம்பந்தப்பட்டவர்கள் புகார் மனு அனுப்பியுள்ளனர்.
‘இந்த அங்கன்வாடி மையம் தொகுதி எம்எல்ஏ நிதியிலிருந்து கட்டப்பட்டது. பேரூராட்சி சார்பில் டெண்டர் விடப்பட்டு கட்டிடம் கட்டப்பட்டது. இது அதிமுக கட்சி நிதியிலிருந்து கட்டப்பட்ட கட்டிடம் இல்லை. அனைத்து கட்சிகளை சேர்ந்த கவுன்சிலர்களால் கட்டப்பட்ட இக்கட்டிடத்தில் எங்களது பெயர் பொறிக்கப்படாமல் இருப்பது அதிர்ச்சியடைய வைக்கிறது. கடந்த திமுக ஆட்சியின்போது கட்சி பாகுபாடின்றி புதிதாக கட்டப்பட்ட அனைத்து அரசு கட்டிடங்களிலும் அனைவரது பெயரும் போடப்பட்டது. ஆனால், இவர்கள் தேர்தல் தேதியை மனதில் வைத்து அவசர அவசரமாக எங்களை புறக்கணித்து செயல்படுவது கண்டனத்துக்குரியது’ என்று பாதிக்கப்பட்ட கவுன்சிலர்கள் கூறுகின்றனர்.