இலவச மிக்சி, கிரைண்டர் மின்விசிறி வழங்க தடை: தாலுகா அலுவலகத்தில் ஒப்படைக்க உத்தரவு
3/5/2025 1:26:18 PM
திருவள்ளூர், தேர்தல் நடைமுறைகள் முடியும்வரை, இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வினியோகத்தை நிறுத்தி வைக்க வேண்டும். பள்ளிகள், சமுதாய கூடங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ள இலவச பொருட்களை தாலுகா அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார். தமிழக அரசு, அனைத்து தரப்பினருக்கும் இலவச மிக்சி, கிரைண்டர், மின் விசிறிகளை வழங்கி வருகிறது.
கடைசியாக கொள்முதல் செய்யப்பட்ட, இப்பொருட்கள் அந்தந்த பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இவற்றை வினியோகிக்கும் பணியில், ஆளுங்கட்சியினரும், அதிகாரிகளும் பிப்ரவரி முதல் தேதியில் இருந்து தீவிரம் காட்ட துவங்கினர். ஆனால், நேற்று தமிழக சட்டமன்றத்துக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. இதனால், உடனடியாக, தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. எனவே, பள்ளிகள் மற்றும் சமுதாய கூடங்களில் மக்களுக்கு வினியோகிப்பதற்காக வாங்கி வைத்த இலவச பொருட்களை, உடனடியாக தாலுகா அலுவலகங்களில் ஒப்படைக்க வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர் சுந்தரவல்லி தெரிவித்துள்ளார்.