ஆந்திராவில் சுட்டுக் கொல்லப்பட்ட 20 தமிழர்களின் உடலை புதைக்காமல் எரிக்கச் சொல்லி மிரட்டிய ஜெ. அரசு : வைகோ தாக்கு
3/5/2025 1:23:42 PM
திண்டிவனம்: ,மக்கள் நலக்கூட்டணியின் 3ம் கட்ட தேர்தல் சுற்றுப்பயண கூட்டம் நேற்று திண்டிவனத்தில் நடந்தது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசியதாவது: கூட்டணியை உடைக்க எதிரிகள் சர்ப்ப வியூகம் செய்தால் கருட வியூகம் அமைத்து தகர்த்திடுவேன். கவுரவர்கள் படையில் அனுபவமிக்க படை தளபதிகள் இருந்தாலும் குறைந்த அளவில் இருந்த பஞ்சபாண்டவர்களிடம் தோற்றனர். ஆந்திரா திருப்பதியில் 20 தமிழர்கள் சித்ரவதை செய்து கொடுமைப்படுத்தி படுகொலை செய்யப்பட்டபோது ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடுவை காப்பாற்ற இறந்தவர்களின் உடலை புதைக்காமல் எரிக்க வேண்டுமென காவல் துறை மூலம் உறவினர்களை மிரட்டியது ஜெ அரசு.
மக்கள் நலக்கூட்டணி ஜெயிக்கும், ஆட்சி அமைக்கும். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன்:முதல் கையெழுத்து என முழங்கும் அன்புமணி மத்திய அமைச்சராக இருந்த போது போட்ட முதல் கையெழுத்தால் ஊழல் வழக்கில் சிக்கியுள்ளார். ஜெயலலிதா ஊழல் வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டவர். மேல்முறையீட்டில் வெளியே வந்தார். அந்த வழக்கு இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. இப்படி எங்கள் கூட்டணியில் உள்ள தலைவர்கள் மீது விரல் நீட்டி ஊழல் குற்றச்சாட்டை கூற முடியுமா?.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்: ஊருக்கு ஊர் சாராயக்கடை திறந்து உன் பாக்கொட்டில் இருந்து பணத்தை எடுத்து உனக்கே மிக்ஸி, கிரைண்டர், பேன், ஆடு மாடு இலவசமாக கொடுப்பது எவ்வளவு திருட்டுத்தனம். தமிழ்நாட்டை விட இளிச்சவாயர்கள் எங்கும் கிடையாது என நினைக்கிறார்கள். திமுக, அதிமுக இரண்டு பெரிய சக்திகளை நமது 4 சிறிய கட்சிகள் ஒன்று சேர்ந்து சாய்க்க வேண்டும்.
மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் ராமகிருஷ்ணன்: தமிழகத்தில் 20 ஆண்டுகாலமாக இயற்கை வளங்கள் கொள்ளை நடந்திருக்கிறது. தென்பெண்ணை ஆற்று மணல் கொள்ளை, தாது மணல் கொள்ளை, கிரானைட் கொள்ளை காலகாலமாக நடந்தது தான். இதில் கிரானைட் கொள்ளையால் தமிழக அரசுக்கு ஒரு லட்சத்து 6 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதை சகாயம் அறிக்கை அளித்துள்ளார். நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் விவசாயிகளின் கடன் முழுவதும் ரத்து செய்யப்படும்.