மே 16ல் சட்டசபை தேர்தல் எதிரொலி 234 தொகுதிகளில் 1400 சிறப்பு படைகள் கண்காணிப்பு- .தமிழக தலைமை தேர்தல் அதிகாரி
3/5/2025 1:18:25 PM
சென்னை, -தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகள், புதுச்சேரியில் உள்ள 30 சட்டப்பேரவை தொகுதிகள், கேரளாவில் உள்ள 140 தொகுதிகள் என 3 மாநிலங்களுக்கும் மே 16ம் தேதி (திங்கட்கிழமை) சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும். இந்த 3 மாநிலங்களிலும் ஏப்.22ம் தேதி (வெள்ளிக்கிழமை) வேட்பு மனுத்தாக்கல் தொடங்கும். வேட்புமனுக்கள் தாக்கல் செய்ய ஏப்.29ம் தேதி (வெள்ளிக்கிழமை) கடைசிநாள். மனுக்கள் ஏப்.30ம் தேதி பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். மனுக்களை மே 2ம் தேதி (திங்கட்கிழமை)க்குள் திரும்ப பெறலாம்.அசாம் மாநிலத்தில் மொத்தமுள்ள 126 தொகுதிகளில் முதற்கட்டமாக ஏப்.4ம் தேதி 65 தொகுதிகளிலும், 2வது கட்டமாக ஏப்.11 தேதி 61 தொகுதிகளிலும், 2 கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும். மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள 294 தொகுதிகளில் 6 கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று நஜீம் அறிவித்தார். ஆனால், அவர் வழங்கிய அட்டவணைப்படி மேற்கு வங்கத்தில் 7 கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும். வாக்கு எண்ணிக்கை மே 19ல் நடக்கும்.தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி நிருபர்களிடம் கூறியதாவது:இந்திய தலைமை தேர்தல் ஆணையர் தேர்தல் தேதி அறிவித்ததும், தமிழகத்தில் பல மாவட்டங்களில் பறக்கும் படை மற்றும் வாகன சோதனை தொடங்கி விட்டது. ஒரு தொகுதிக்கு 3 பறக்கும் படை, 3 சோதனை சாவடி என 234 தொகுதிகளில் 1,404 சிறப்பு படைகள் நியமிக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் கண்காணிப்பு பணிகளில் இவர்கள் ஈடுபடுவார்கள். ஒரு படையில் ஒரு கேமராமேன், போலீசார் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் என 4 பேர் இடம் பெற்றிருப்பார்கள்.
தமிழக அரசு சார்பில் எந்த புதிய திட்டங்கள், சலுகைகள், நிதி சலுகைகள் மற்றும் உறுதிமொழிகள், அடிக்கல் நாட்டுதல் உள்ளிட்ட எந்த பணிகளிலும் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் ஈடுபடக்கூடாது. ஏற்கனவே அறிவித்த திட்டங்களை, தேர்தல் அதிகாரியிடம் அனுமதி பெற்று நிறைவேற்றலாம். குறிப்பாக, வெள்ளம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. பணம் கிடைக்காதவர்களுக்கு, தேர்தல் அதிகாரியிடம் அனுமதி பெற்ற பிறகே இனிமேல் வழங்க முடியும்.அம்மா உணவகம், அம்மா குடிநீர் உள்ளிட்ட அரசு திட்டங்களில், அரசு கட்டிடங்களில் உள்ள முதல்வர் ஜெயலலிதா படங்களை உடனடியாக அகற்ற வேண்டும். அரசு சாதனைகளை விளக்கி, அரசு நிதியை பயன்படுத்தி விளம்பரங்கள் வெளியிட தடை செய்யப்படுகிறது.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ரூ.28 லட்சம் வரை செலவு செய்யலாம். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிட்டதால், பொதுமக்களும் தாங்கள் எடுத்துச் செல்லும் பணத்துக்கு உரிய ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும். இவ்வளவு பணம் ஆவணம் இல்லாமல் எடுத்துச் செல்லலாம் என்று எந்த விதிமுறையும் இல்லை. எது எடுத்துச் சென்றாலும் உரிய ஆவணங்கள் இருந்தால், பொதுமக்களுக்கு எந்த தொந்தரவும் இருக்காது. தேர்தல் விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு ராஜேஷ் லக்கானி கூறினார்.