காஷ்மீரில் ஆட்சி : கவர்னருடன் சந்திப்பு : பாஜ கூட்டணி விமர்சனங்களை எதிர்கொள்ள தயார்: பிடிபி தலைவர் மெகபூபா திட்ட வட்டம்
3/5/2025 1:08:00 PM
ஸ்ரீநகர்,: காஷ்மீரில் ஆட்சி அமைப்பது தொடர்பாக கவர்னரை சந்தித்த பிடிபி தலைவர் மெகபூபா, பாஜவுடன் கூட்டணி அமைப்பதால் எழும் விமர்சனங்களை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக தெரிவித்தார். காஷ்மீரில் முதல்வர் முப்தி முகமது சயீத் கடந்த ஜனவரி 8ம் தேதி இறந்ததைத் தொடர்ந்து அங்கு கவர்னர் ஆட்சி அமலில் உள்ளது. கடந்த இரண்டு மாதங்களாக ஆட்சி அமைப்பது தொடர்பாக சஸ்பென்ஸ் நிலவி வரும் வேளையில், பாஜ-பிடிபி இடையிலான கூட்டணியில் இழுபறி நிலை காணப்படுகிறது.
பட்ஜெட்டில் காஷ்மீருக்கு புதிய அறிவிப்புகள் எதுவும் இல்லாத நிலையில் பாஜ-பிடிபி கூட்டணியில் பிளவு ஏற்பட வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளியாகின. இந்த சூழலில் பிடிபி தலைவர் மெகபூபா முப்தி, கவர்னர் வோராவை சந்தித்து பேசினார். அப்போது அரசியல் நிலவரங்கள் மற்றும் ஆட்சி அமைப்பதில் உள்ள சவால்கள் குறித்து அவருடன் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது. அதற்கு முன்னதாக அவர் கூறுகையில், பாஜவுடன் கூட்டணி அமைக்கவில்லை. மாறாக காஷ்மீர் மக்களின் நலனை கருத்தில் கொண்டு மத்திய அரசுடன் தான் கூட்டணி அமைக்க விரும்புகிறோம்.
இந்த முடிவு எனது தந்தை முப்தியால் எடுக்கப்பட்டதாகும். எங்களைப் பொறுத்த வரையில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். மத்திய அரசால் காஷ்மீர் மக்களுக்கு பலன் கிடைக்க வேண்டும். அவ்வாறு அமைந்து விட்டால், பின்னர் பாஜவுடன் கூட்டணி வைத்தது தொடர்பாக எந்த விமர்சனம் வந்தாலும் அது ஒரு பெரிய விஷயமாக இருக்காது. முப்தியின் இறப்புக்கு பிறகு காஷ்மீரில் அசாதாரணமான சூழல் நிலவி வருகிறது.
பாஜவுடன் எனது தந்தை கைகோர்க்கவில்லை. மத்திய அரசுடன் தான். எனவே அதே நோக்கத்தில் தற்போது நாங்களும் கூட்டணி அமைக்க விரும்புகிறோம். தற்போது காஷ்மீர் மக்களுக்கு சில திட்டங்களை செய்து தருவதாக மத்திய அரசிடம் இருந்து பச்சை சிக்னல் கிடைத்துள்ளது. அவ்வாறு மத்திய அரசு முன்வந்தால், நாங்கள் கூட்டணி ஆட்சி அமைக்க தயாராக உள்ளோம். அதே போல் முதல்வராக பதவி வகிப்பதில் எனக்கு எந்த தயக்கமும் கிடையாது. உண்மையில் சொல்லப் போனால் அது மிகவும் பெருமையான ஒன்றாகும் என்றார்.