மேற்கு வங்க தேர்தலில் இடதுசாரிகளுக்கு ஆதரவாக கன்னையா குமார் பிரசாரம் -சிபிஎம் தலைவர் சீதாராம் யெச்சூரி தகவல்
3/5/2025 1:07:53 PM
கொல்கத்தா, -மேற்கு வங்கத்தில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள சட்டமன்ற தேர்தலில் இடது சாரி கட்சிகளை ஆதரித்து கன்னையா குமார் பிரசாரம் செய்வார் என சிபிஎம் தலைவர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.நேரு பல்கலையில் அப்சல் குரு நினைவு தினம் நிகழ்ச்சியின் போது தேச விரோத கோஷங்கள் எழுப்பப்பட்டதாக புகார் எழுந்தது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மாணவர் சங்க தலைவர் கன்னையா குமார் அண்மையில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். நேரு பல்கலை கழக விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சூழலில் மத்திய அரசு தனது நடவடிக்கையின் காரணமாக அரசியலில் கன்னையா குமார் என்ற புதிய நட்சத்திரத்தை உருவாக்கி விட்டது என காங்கிரஸ் எம்பி சசி தரூர் உள்ளிட்டோர் தெரிவித்திருந்தனர்.
இதற்கு பதிலடியாக, கன்னையா குமாரின் கட்சி நாடாளுமன்றத்தில் ஒற்றை இலக்கத்தில்தான் உள்ளது. தேவைப்பட்டால் அவர் கல்வியை விட்டு விட்டு அரசியலுக்கு வந்து அந்த கட்சிக்கு பாடுபடலாம் என்று வெங்கய்யா நாயுடு கிண்டல் அடித்தார்.இந்த சூழலில் தற்போது மேற்கு வங்கம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேற்கு வங்கத்தில் இடது சாரிகள் சார்பில் கன்னையா குமார் பிரசாரம் செய்வார் என சிபிஎம் பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவி–்த்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறுகையில், மேற்கு வங்க தேர்தலில் இடதுசாரிகள் சார்பில் கன்னையா குமார் உள்ளிட்ட மாணவர்கள், இளைஞர்கள் பிரசாரம் செய்ய உள்ளனர். இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் சக்தியை முதன்முறையாக நாடு நேரிடையாக பார்த்துள்ளது. மேற்கு வங்கத்தில் தேர்தல் நேர்மையாக நடைபெறுவதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும். அங்கு எந்த வித வன்முறைக்கும் இடம் தரக் கூடாது. எனவே அவ்வாறு நடக்க வேண்டும் என்று கருதினால் இதற்கான பொறுப்பை மாநில போலீசாரிடம் ஒப்படைக்க கூடாது என்றார். இதற்கிடையில் நான் ஒரு மாணவன், அரசியல்வாதி இல்லை என கன்னையா குமார் கூறியுள்ளார்.மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளில் ஏப்ரல் 4ம் தேதி தொடங்கி மே 5ம் தேதி வரை ஆறு கட்டமாக தேர்தல் நடக்கிறது.