பதன்கோட் தாக்குதல் சம்பவம்- விசாரணை நடத்த பாக். குழுவினரை அனுமதிக்கலாமா? விமான படை தளபதி பரபரப்பு பேட்டி
3/5/2025 1:07:25 PM
ஜாம்நகர், -பதன்கோட்டில் தீவிரவாதிகள் தாக்குதல் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த பாகிஸ்தான் குழுவினரை அனுமதிக்கலாமா என்பது குறித்து விமான படை தளபதி பேட்டியின் போது தெரிவித்துள்ளார்.பஞ்சாபில் உள்ள எல்லை பகுதியில் அமைந்துள்ள பதன்கோட்டில் தீவிரவாதிகள் கடந்த ஜனவரி 2ம் தேதி நடத்திய தாக்குதலில் 7 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இந்த சம்பவத்தில் ஊடுருவிய 6 தீவிரவாதிகளும் 2 நாட்கள் சண்டைக்கு பிறகு சுட்டு கொல்லப்பட்டனர். இது தொடர்பாக பாகிஸ்தானுக்கு அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் கண்டனம் தெரிவித்திருந்தன. பதன்கோட் தாக்குதலில் தொடர்பு உடைய ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் மீது பாகிஸ்தான் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தி வருகிறது. இதை தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையில் நடக்க இருந்த அமைதி பேச்சு வார்த்தைகளும் ரத்து செய்யப்பட்டன. இதை தொடர்ந்து பதன்கோட் சம்பவம் தொடர்பாக எப்ஐஆர் பதிவு செய்துள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்தது. இந்தியா அனுமதித்தால் பதன்கோட்டில் சம்பவ இடத்தில் நேரில் வந்து விசாரணை நடத்த பாகிஸ்தான் விருப்பம் தெரிவித்துள்ளது. இதற்காக பாகிஸ்தான் குழுவினர் இன்னும் சில நாட்களில் இந்தியா வர உள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் நவாசின் வெளியுறவுத்துறை ஆலோசகர் சர்தாஜ் ஆசிஸ் தெரிவித்திருந்தார்.
இந்த சூழலில் குஜராத்தில் உள்ள ஜாம்நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விமான படை தளபதி அரூப் ராகா கலந்து கொண்டார் . அப்போது அவர் நிருபர்களிடம் கூறுகையில், தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதன் மூலமாக இந்த வழக்கை முடிவுக்கு கொண்டு வர விரும்புகிறோம் என்றார். பாகிஸ்தான் குழுவினர் பதன்கோட் வந்து விசாரணை நடத்த அனுமதிப்பதால் ஏதாவது பிரச்னைகள் எழ வாய்ப்புள்ளதா என்று கேட்ட போது, பதன்கோட்டில் விசாரணை நடத்த அரசு அனுமதி அளித்தால் அதற்கு நாங்கள் என்ன ஆட்சேபனை தெரிவிக்க முடியும்.பதன்கோட்டில் பாகிஸ்தான் குழுவினர் நுழைந்து விசாரணை நடத்தலாமா? வேண்டாமா என்பது ஒரு அரசியல் ரீதியான முடிவாகும். எனவே அது குறித்து நான் கருத்து எதுவும் கூற முடியாது. ஆனால் இது தொடர்பாக சில விஷயங்கள் வெளியே வரவேண்டிய தேவை உள்ளது. எனவே விசாரணை தொடர வேண்டும் என்று நாம் கருதலாம். தாக்குதல் நடத்தியவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பதன் மூலம் இந்த விவகாரத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்றார்.