புரோ கபடி லீக்; பைனலில் பாட்னா, மும்பை
3/5/2025 1:04:28 PM
புதுடெல்லி: பார்தீப் நர்வாலின் அசத்தலான ஆட்டத்தால் பாட்னா பைரேட்ஸ் அணி அரையிறுதியில் புனே பால்தான் அணியை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.புரோ கபடி லீக் தொடரின் அரையிறுதி ஆட்டங்கள் புதுடெல்லி இந்திரா காந்தி உள்ளரங்க மைதானத்தில் நேற்றிரவு நடந்தது. முதல் அரையிறுதியில் பாட்னா பைரேட்ஸ் அணி, புனே பால்தான் அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது. புனே அணி இந்த ஆட்டத்தில் மூன்று முறை ஆல்-அவுட்டானது. முதல் 12 நிமிடங்களில் மட்டும் புனே அணி 2 முறை ஆல்-அவுட்டானது. தாக்குதல் பாணி ஆட்டத்தின் மூலம் புனே பால்தான் அணியை சிதற அடித்த பாட்னா அணியினர், முதல் பாதி ஆட்டத்தின் போது 25-7 என்ற புள்ளிகளில் முன்னிலை பெற்றனர்.
இரண்டாவது பாதி ஆட்டம் துவங்கியதும் சிறிது நேரத்துக்கு புனே பால்தான் அணி பதிலடி கொடுத்து, பாட்னாவை ஒரு முறை ஆல்-அவுட் செய்தது. ஆனால், புனே அணியின் தாக்குதல் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. பாட்னா அணியின் பார்தீப் நர்வால், எதிரணி கேப்டன் மன்ஜீத் சில்லாரை தனது முதல் ரெய்டில் அவுட்டாக்கினார். இதன் பின்னர் புனே அணியால் தோல்வியின் பிடியில் இருந்து மீண்டு வர முடியவில்லை. இறுதியில் பாட்னா பைரேட்ஸ் அணி 40-21 என்ற புள்ளிக் கணக்கில் புனே பால்தான் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் யு மும்பை அணி 41-29 என்ற புள்ளிக்கணக்கில் பெங்கால் வாரியர்ஸ் அணியை வீழ்த்தி பைனலுக்கு முன்னேறியது.