உலக கோப்பையில் சிறப்பாக ஆடுவோம் பாக். கேப்டன் அப்ரிடி நம்பிக்கை
3/5/2025 1:03:27 PM
மிர்பூர்: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் இலங்கையை பாகிஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெற்றது. 37 பந்துகளில் 48 ரன் எடுத்த உமர் அக்மல் ஆட்டநாயகன் விருது பெற்றார். வெற்றிக்கு பின் பாகிஸ்தான் கேப்டன் அப்ரிடி கூறுகையில், ‘‘இன்றைய போட்டியில் அனைத்தும் எங்களுக்கு சாதகமாக அமைந்தது. சேசிங்கின் போது முதல் 6 ஓவரில் அதிக விக்கெட் இழக்காமல் இருப்பது முக்கியம். அது இன்றைய ஆட்டத்தில் நடந்தது. வெற்றிக்காக இளம் வீரர்கள் கடுமையாக உழைத்தனர். இந்த வெற்றியால், உலக கோப்பையில் சிறப்பாக விளையாட முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது,’’ என்றார்.
இலங்கை கேப்டன் சண்டிமால் கூறுகையில், ‘‘நாங்கள் 10 முதல் 15 ரன்கள் கூடுதலாக எடுத்திருந்தால் திருப்புமுனையாக அமைந்திருக்கும். பனியின் தாக்கம் அதிகமாக இருந்ததால் பந்து வீச கடினமாக இருந்தது. முன்னணி வீரர்கள் காயம் முக்கிய பிரச்னையாக உள்ளது,’’ என்றார்.ஆட்ட நாயகன்விருது பெற்ற அக்மல் கூறுகையில், ‘‘பயிற்சியாளர் வக்கார், உலக கோப்பை தொடருக்கு முன் வெற்றியுடன் செல்ல வேண்டும் என என்னை ஊக்கமூட்டியதால் கூடுதல் கவனத்துடன் ஆடினேன்,’’ என்றார்.