பெரியபாளையம் அருகே பாட்டிலால் தாக்கியதில் தொழிலாளி பலி; ஒருவர் கைது
3/4/2025 2:19:48 PM
ஊத்துக்கோட்டை, பெரியபாளையம் அருகே கன்னிகைபேர் கிராமத்தை சேர்ந்தவர் பால்குணசேகரன் (57). விவசாயி. இவருக்கு சொந்தமான நிலத்தில், அதே பகுதியை சேர்ந்த சுரேஷ் (35) என்பவர் கூலிவேலை செய்து வந்தார்.இந்நிலையில், பயிர்களுக்கு நேற்று சுரேஷ் மருந்து தெளித்து வந்தார். நேற்று மாலை நிலத்துக்கு வந்த பால்குணசேகரன், ‘பயிர்களுக்கு நீ சரியாக மருந்து அடிக்கவில்லை. ஏன் இப்படி செய்கிறாய்?’ என்று சுரேஷை கண்டித்துள்ளார்.இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது பால்குணசேகரன் வயல்வெளியில் கிடந்த காலி மது பாட்டிலை எடுத்து, சுரேஷின் முகத்தில் தாக்கியுள்ளார்.
இதில் படுகாயம் அடைந்த சுரேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இதுகுறித்து தகவலறிந்ததும் பெரியபாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.அங்கு சுரேஷின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். சுரேஷை பாட்டிலால் அடித்து கொலை செய்த பால்குணசேகரனை போலீசார் கைது செய்தனர்.பின்னர் இதுகுறித்து பெரியபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் வழக்குப்பதிவு செய்தார். பால்குணசேகரனை ஊத்துக்கோட்டை நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.