கூட்டணி குறித்து பேச மத்திய அமைச்சர் ஜவடேகர் மீண்டும் சென்னை வருகை- விஜயகாந்த்தை சந்திக்க திட்டம்?
3/3/2025 3:27:54 PM
சென்னை, -கூட்டணி குறித்து பேசுவதற்காக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் மீண்டும் சென்னை வந்துள்ளார். அவர் தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை மீண்டும் சந்திக்க திட்டமிட்டுள்ளார்.தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பாஜ கூட்டணி குறித்து பேசுவதற்காக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் கடந்த 27, 28ம் தேதி சென்னை வந்து அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், இந்திய ஜனநாயக கட்சி(ஐஜேகே) தலைவர் பாரிவேந்தர், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் ஆகியோருடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதில் சமத்துவ மக்கள் கட்சி, புதிய நீதிக்கட்சி பாஜ கூட்டணிக்கு சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஐஜேகே மட்டும் நிபந்தனை விதித்துள்ளது. முதல்வர் ஜெயலலிதாவையும் சந்திக்க ஜவடேகர் திட்டமிட்டிருந்தார். ஆனால் அவரை சந்திக்க ஜெயலலிதா மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் இல்லத்திற்கு சென்று கூட்டணிக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். சுமார் 1 மணி நேரத்துக்கு மேலாக நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.
ஆனால் சந்திப்புக்கு பின்னர் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அளித்த பேட்டியில், “விஜயகாந்துடனான பேச்சு பயனுள்ள வகையில் இருந்தது. விஜயகாந்திடம் பேசியது குறித்து கட்சி தலைவருக்கு தெரிவிக்கப்படும். கட்சி தலைவருடன் ஆலோசித்து மீண்டும் விஜயகாந்த்தை சந்தித்து கூட்டணி குறித்து பேசுவேன்” என்று தெரிவித்தார். அடுத்த நிமிடமே தேமுதிக தரப்பில் இருந்து ஒரு அறிக்கை வந்தது. அதில், ‘மரியாதை நிமித்தமாக பிரகாஷ் ஜவடேகர் விஜயகாந்தை சந்தித்து பேசினார்’ என்று தெரிவிக்கப்பட்டது. இது பாஜ தரப்பில் பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், இன்று காலை ரகசியமாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் சென்னை வந்தார். அவர் வருகை தமிழக பாஜகவுக்கே ெதரியாது என்று கூறப்படுகிறது. முக்கிய தலைவர் ஒரு சிலருக்கு மட்டுமே தெரிந்தது. விமான நிலையத்தில் இருந்து அவர் பாஜ பிரமுகர் வீட்டில் சிறிது நேரம் தங்கினார். அவர் விஜயகாந்தை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.