ஒரு பக்கம் மட்டும் ஜெராக்ஸ் எடுத்ததால் மாணவியின் தலை முடியை கொத்தாக பிய்த்த ஆசிரியர் -வேலூர் அரசு பள்ளியில் கொடூரம்
3/3/2025 2:56:43 PM
நாட்றம்பள்ளி, -பள்ளி மாணவியின் தலைமுடியை கொத்தாக பிய்த்து எடுத்த ஆசிரியர் மீது போலீசில் புகார் கொடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.வேலூர் மாவட்டம் நாட்றம்பள்ளி தாலுகா வேட்டப்பட்டு ஊராட்சி ஜல்லியூரான் வட்டம் பகுதியை சேர்ந்தவர் சாமுடி(40). இவர் பீடி தொழிலாளி. இவரது மனைவி கல்பனா. இவர்களுக்கு 3மகள்கள் உள்ளனர். 3வது மகள் சங்கவி(15). நாட்றம்பள்ளி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார்.
இப்பள்ளியில் தமிழ் ஆசிரியர் சொரக்காயல்நத்தம் பகுதியை சேர்ந்த கணேசன். இவர் நேற்று பிற்பகல் 3 மணியளவில் மாணவி சங்கவியை அழைத்து புத்தகம் ஒன்றை ஜெராக்ஸ் எடுத்து வரும்படி கூறியுள்ளார். மாணவியும் கடைக்கு சென்று ஜெராக்ஸ் எடுத்து வந்துள்ளார்.
ஒரு பக்கம் மட்டும் ஜெராக்ஸ் எடுத்து வந்ததால் ஆத்திரமடைந்த ஆசிரியர் ‘ஏன் ஒரு பக்கம் மட்டும் ஜெராக்ஸ் எடுத்துள்ளாய், மீதம் உள்ள இரண்டு பக்கத்தையும் ஜெராக்ஸ் எடுத்து வரவேண்டியதுதானே, இதுகூட தெரியாமல் ஏன் நீ பள்ளிக்கு வருகிறாய்’ என்று திட்டி மாணவியின் தலைமுடியை பிடித்து இழுத்துள்ளார். மாணவி தலையின் முன்பகுதியில் இருந்த தலைமுடி கொத்தாக ஆசிரியரின் கையில் வந்துள்ளது. வலியால் துடித்த மாணவி, மயங்கி விழுந்துள்ளார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த சக ஆசிரியர்கள், உடனடியாக மாணவிக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.இதுகுறித்து யாரிடமும் சொல்ல வேண்டாம். தலைமுடி இல்லாத இடத்தை மறைத்துக் கொண்டு வீட்டிற்கு செல்லுமாறு ஆசிரியர்கள் கூறியதாக தெரிகிறது. மாலையில் சிறப்பு வகுப்பு முடிந்து வீட்டிற்கு சென்ற மாணவி பெற்றோரிடம் நடந்த சம்பவத்தை கூறி அழுதுள்ளார்.இதுகுறித்து நாட்றம்பள்ளி போலீசில் பெற்றோர் புகார் செய்தனர். வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.